Published : 04 May 2020 07:53 AM
Last Updated : 04 May 2020 07:53 AM

சிமென்ட் கலவை உருளைக்குள் பதுங்கி சொந்த ஊர் செல்ல முயன்ற தொழிலாளர்கள்

ஊரடங்கு காரணமாக சிக்கிக்கொண்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. இதற்காக, பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அவர்கள் அனுப்பப்படுகின்றனர்.

இதனால், பல வெளிமாநிலத் தொழிலாளர்கள் முறையான அனுமதி பெறாமல் சரக்கு லாரிகள், ரயில்களில் பதுங்கி தங்களின் மாநிலங்களுக்கு செல்ல முற்படுகின்றனர். அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் போலீஸார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கான்கிரீட் லாரியை மடக்கிய போலீஸார், அதில் இருந்த ஓட்டுநரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார், லாரியை சோதனை செய்துள்ளனர். அப்போது, அந்த லாரியில் இருந்த பெரிய சிமென்ட் கலவை உருளைக்குள் 18 வெளிமாநிலத் தொழிலாளர்கள் பதுங்கி இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். தங்கள் சொந்த மாநிலமான உத்தரபிரதேசம் செல்வதற்காக அவர்கள் இவ்வாறு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் தனி முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக அவர்களை அழைத்து வந்த லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x