

உத்தரபிரதேச அரசுக்கு கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் வந்த நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு பல லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச அரசுக்கு கடந்த ஏப்ரல் மாத வருவாயாக வெறும் ரூ.2,284 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. அதேநேரம் அம்மாநிலத்தில் பணிபுரியும் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 12 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம், ஓய்வூதியமாக ரூ.12 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் பற்றாக்குறையாக இருந்த ரூ.10 ஆயிரம் கோடியை தனது நிதியாதாரத்தில் இருந்து ஈடுகட்டி விட்டது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில், அடுத்து வரும் மாதங்களில் ஏற்படும் செலவை ஈடுகட்டுவது கடினமாகிவிடும். எனவே வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய சிறப்புக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.