Last Updated : 03 May, 2020 02:34 PM

 

Published : 03 May 2020 02:34 PM
Last Updated : 03 May 2020 02:34 PM

ஏற்கெனவே 135 பேருக்கு பாஸிட்டிவ்: டெல்லியில் சிஆர்பிஎப் தலைமை அலுவலகமே மூடி சீல் வைப்பு: இரு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி 

கரோனா வைரஸ் தொற்றால் டெல்லியில் சிஆர்பிஎப் வீரர்கள் 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதன் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த இரு ஊழியர்களுக்கும் கரோனா உறுதியானதால், தலைமை அலுவலகமே மூடி சீல் வைக்கப்பட்டது

31-வது பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் 135 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லி மயூர் விஹார்-3 பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பாதிப்பு மேலும் பரவாதபடி பரிசோதனைகள் தொடர்ந்து வருகின்றன.

இந்த சூழலில் டெல்லி லோதி சாலையில் உள்ள 5 அடுக்கு மாடியில் இருக்கும் சிஆர்பிஎப் தலைமை அலுவலக்தில் சிறப்பு இயக்குநரின்(எஸ்டிஜி) தனி உதவியாளருக்கு நேற்று கரோன தொற்று இருப்பது உறுதியானது.

மேலும், தலைமை அலுவலகத்துக்கு பணிக்கு வரும் ஊழியர்களை அழைத்து வரும் சிஆர்பிஎப் பேருந்து ஓட்டுநருக்கும் கரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த இரு ஊழியர்களும் தலைமை அலுவலகத்தில் நேரடியா அனைவருடனும் தொடர்பில் இருந்ததால் அலுவலகமே சீல்வைத்து இன்று மூடப்பட்டது

இதுகுறித்து சிஆர்பிஎப் இயக்குநர் ஏ.பி. மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில் “ கோவிட்-19 வழிமுறைகளை கண்டிப்பாக பி்ன்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இரு ஊழியர்களுடன் தொடர்பி்ல் இருந்தவர்கள் அனைவரும் தேடி கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள். சிஆர்பிஎப் சிறப்பு இயக்குநர் ஏற்கனவே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மற்றவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். அலுவலத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட இருப்பதால் தலைமை அலுவலகம் மூடி சீல்வைக்கப்பட்டுள்ளது. யாரும் செல்ல அனுமதியி்ல்லை” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே சிஆர்பிஎப் பிரிவில் 31-வது பட்டாலியனில் கடந்த இரு வாரங்களில் இதுவரை 135 வீரர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 100க்கும் மேற்பட்டோரின் பரிசோதனை முடிவுகள் வர இருப்பதால் பாதிப்பு அதிகரிக்குமா எனத் தெரியவில்லை.

இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிஆர்பிஎப் வீரர்களுக்கு அறிகுறி இல்லாத கரோனா தொற்று இருந்துள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி மன்டோலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் சிஆர்பிஎப் துணை ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியானது. அதைத் தொடர்ந்து 12 வீரர்களுக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பரிசோதனையைத் தீவிரப்படுத்தியபோதுதான் ஏராளமான வீரர்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x