Last Updated : 03 May, 2020 01:54 PM

 

Published : 03 May 2020 01:54 PM
Last Updated : 03 May 2020 01:54 PM

சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான சிறப்பு ரயில்கள்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது இந்திய ரயில்வே

ஊரடங்கில் சிக்கியவர்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களின் இயக்கம் குறித்து இந்திய ரயில்வே வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

ஊரடங்கினால் நாட்டின் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்களைக் கொண்டு செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மே 3 ஆம் தேதி முடிவடையத் திட்டமிடப்பட்டிருந்த நாடு தழுவிய ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோவிட்-19ஐ அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்துப் பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்வது மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது இயங்கத் தொடங்கியுள்ள சிறப்பு ரயில்களைப் பொறுத்தவரை அந்தந்தப் பகுதிகளில் இயங்கும் மண்டல ரயில்வேக்கள் இந்த ரயில்களை மாநில நிர்வாகத்தின் கோரிக்கைக்கு ஏற்ப இயக்கும். மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, மாநில நிர்வாகங்கள் குறிப்பிடும் இடங்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில் டிக்கெட்டுகளை ரயில்வே அச்சிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கான உள்ளூர் அதிகாரிகள் பயணிகளிடம் டிக்கெட்டுகளை ஒப்படைக்க வேண்டும், அதேபோல டிக்கெட் கட்டணத்தையும் வசூலித்து மொத்த டிக்கெட் கட்டணத் தொகையை ரயில்வேக்கு ஒப்படைக்கவேண்டும் எனவும் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் இந்திய ரயில்வே மேலும் கூறியுள்ளதாவது:

''அனைத்துப் பயணிகளும் முகத்தை மூடிக்கொள்ளுதல் / முகக்கவசம் (face cover / face mask) அணிவது கட்டாயமாக இருக்கும்.

12 மணி நேரத்திற்கு அப்பால் செல்லும் நீண்ட பயணம் கொண்ட ரயில்களில், பயணிகளுக்கான உணவை ரயில்வே வழங்கும்.

மாநில அரசால் பயணிக்க அனுமதிக்கப்பட்ட மற்றும் பயணத்திற்கான செல்லுபடியாகும் டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே நிலைய வளாகத்திற்குள் நுழைய வேண்டும் என்பதை உறுதி செய்ய போதுமான பாதுகாப்பை அந்தந்த மாநில நிர்வாகங்கள் பொறுப்பேற்கும்.

மாநில அரசுகள் உணவுப் பொட்டலங்கள் மற்றும் குடிநீரைத் அந்தந்த மாநிலப் பகுதிகளில் வழங்க வேண்டும்.

பயணிகள் தங்கள் இடங்களுக்கு வரும்போது, ​​பயணிகளை மாநில அரசு அதிகாரிகள் வரவேற்பார்கள். அவர்கள் சோதனை செய்யப்படுதல், தனிமைப்படுத்துதல் (தேவைப்பட்டால்) மற்றும் ரயில் நிலையத்திலிருந்து மேலும் பயணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் நிலையான சமூக இடைவெளி பின்பற்றப்படுவது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே வழிநடத்தும்''.

இவ்வாறு இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x