Published : 02 May 2020 09:51 PM
Last Updated : 02 May 2020 09:51 PM

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவில் நிதியுதவி திட்டம்: நிதின் கட்கரி திட்டவட்டம்

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவில் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25-ம் தேதியிலிருந்து லாக் டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த லாக் டவுன் காலத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

ஏழைகள், விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கடந்த மாதம் 26-ம் தேதி ரூ.1.77 லட்சம் கோடி மதிப்பில் முதல் கட்ட பொருளாதார நிதித்தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 2-ம் கட்ட பொருளாதார நிதித்தொகுப்பை நேற்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கவில்லை. மேலும், ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் விவரங்களும் வெளியிடவில்லை.

இந்நிலையில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவில் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் மீண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஊரடங்கு காலத்துக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாக சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் அறிவுரைகள் வழங்கி வருகிறோம்.

இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும் நிதியுதவி மற்றும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நிதியமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளோம். விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x