பெங்களூருவில் இருந்து ஆந்திராவுக்கு நடந்து சென்ற இளைஞர் உயிரிழப்பு: கரோனா அச்சத்தால் உடலை வாங்க மறுப்பு

பெங்களூருவில் இருந்து ஆந்திராவுக்கு நடந்து சென்ற இளைஞர் உயிரிழப்பு: கரோனா அச்சத்தால் உடலை வாங்க மறுப்பு

Published on

பெங்களூருவில் இருந்து ஆந்திரமாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு நடந்த வந்த இளைஞர் திடீரென உயிரிழந்தார். ஆனால்,கரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ராமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி பிரசாத் (28). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலஎல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், ஹரி பிரசாத் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து வந்தார்.

சுமார் 200 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து ராமசமுத்திரம் அருகே வந்தபோது நேற்று முன்தினம் ஹரிபிரசாத் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

இதுபற்றி தகவலறிந்த போலீஸார் ஹரிபிரசாத் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால்,ஹரி பிரசாத் வைரஸ் தொற்று காரணமாக இறந்திருக்கலாம் என்ற அச்சத்தால் அவரது உடலைஉறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர்.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஹரி பிரசாத்தின் உடலை சோதனை செய்தனர். இதில் ஹரி பிரசாத்துக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அதிக தூரம் நடந்து வந்ததால் சோர்வு, பசி,மயக்கம் காரணமாக ஹரி பிரசாத்இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் உறவினர்கள் உடலை வாங்கிச் சென்று நேற்று மாலை இறுதிச் சடங்குகள் செய்து தகனம் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in