Last Updated : 30 Apr, 2020 03:19 PM

 

Published : 30 Apr 2020 03:19 PM
Last Updated : 30 Apr 2020 03:19 PM

வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தப்பி ஓடியவர்களுக்கு கணக்கியல் ரீதியாக கடன் தள்ளுபடி எப்படிப் பொருந்தும்?-ப.சிதம்பரம் கேள்வி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்

புதுடல்லி

வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்ஸி ஆகியோரின் கடன் கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்தது எந்த வகையில் பொருத்தமாக இருக்கும் என்பதை விளக்குங்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“டெக்னிக்கலி ரைட் ஆஃப்” அல்லது “கணக்கியல் ரீதியாக தள்ளுபடி” என்பது வங்கியின் வரவு-செலவுக் கணக்கில் மேற்கொள்ளப்டும் செயலாகும். அதாவது ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் கணக்கில் ஒரு வங்கி தனது வாராக்கடனை, செயல்படா சொத்துகளைத் தள்ளுபடி செய்ததாக கணக்கீடு ரீதியாகக் காண்பிக்கும். ஆனால், கடன் கொடுத்த வங்கிக் கிளையைப் பொறுத்தவரை இந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படாது. கடன் வாங்கிய நபரிடம் இருந்து கடன் தொகையைப் பெறும் முயற்சி தொடர்ந்து நடக்கும்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே தாக்கல் செய்த மனுவில், பிப்ரவரி 16-ம் தேதி வரை கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். அதில் ரூ.68 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொலைபேசி அழைப்பு மூலம் கடன் பெற்றவர்கள். அவர்களை மோடி அரசு விரட்டி, கடனை வசூலித்து வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

நிர்மலா சீதாராமனுக்குப் பதில் அளிக்கும் வகையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீடியோ மூலம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், “வங்கிகள் கடன்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தள்ளுபடி செய்யலாம் மற்றும் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக மீட்டெடுப்புகள் தொடரலாம் என்ற விதியை ஒருவர் மறுக்க முடியாது. ஆனால், மோசடி செய்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி, விஜய் மல்லையா ஆகியோருக்கு எதிராக இந்த விதி ஏன் பயன்படுத்தப்பட்டது?

கடன் பெற்று மோசடி செய்து நாட்டை விட்டுத் தப்பி ஓடியவர்களாக இருக்கும்போது, அவர்களுக்கு எதிராகக் கணக்கியல் ரீதியாக கடன் தள்ளுபடி என்ற விதியைச் செயல்படுத்தக்கூடாது. இது என்னுடைய கருத்து.

கணக்கியல் ரீதியாக கடன் தள்ளுபடி எனும் விதி மற்ற கடன்களைச் செலுத்தாமல் இருக்கிறார்க என்றால் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். ஆனால், நாட்டைவிட்டுத் தப்பி ஓடியவர்களுக்கு எதிராக ஏன் பயன்படுத்தப்பட்டது? எதற்காக நிதியமைச்சர் கணக்கியல் ரீதியாக கடன் தள்ளுபடி சென்ற விதிக்குப் பின்னால் மறைந்து கொள்கிறார்?

கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், இந்தியாவில் தங்கி விசாரணையை எதிர்கொள்ளத் துணிவிருக்கும் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் அவர்களுக்கு எதிராகக் கணக்கியல் ரீதியாக கடன் தள்ளுபடியைப் பயன்படுத்தலாம்.

ஆனால், வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டுத் தப்பி ஓடியவர்கள் என அரசால் அறிவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக கணக்கியல் ரீதியாக கடன் தள்ளுபடி எவ்வாறு பொருந்தும்? இவர்களுக்கு எதற்காக அரசு நற்சான்று அளிக்கிறது என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம்.

இவர்களின் கடன்கள் மீட்கக்கூடியதா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. இவர்கள் இந்தியாவில் சொத்து வைத்திருக்கிறார்களா அல்லது வெளிநாடுகளில் சொத்து வைத்திருக்கிறார்களா என்பதைப் பொறுத்து இருக்கும். இந்தக் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.

கடந்த 37 நாட்களாக ஏன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மவுனமாக இருந்துவி்ட்டு, நாட்டை விட்டுத் தப்பி ஓடியவர்களுக்காக இப்போது திடீரென சார்பாகப் பேசுகிறார். இது வியப்பாகவும், முரணாகவும் இல்லையா?”

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x