

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் ஒரு நாளின் சராசரி வெப்பநிலை ஏற்றத்தாழ்வுக்கும் கரோனா வைரஸ் பரவலுக்கும் இடையே 85% வரை தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு நாளில் வெப்ப நிலை அதிகரிக்கும்போது கரோனா வைரஸ் தாக்கத்தின் அளவு குறைவதாகவும் வெப்பநிலை குறைந்தால் பாதிப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில நகரங்கள் மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில், ஒரு நாளில் சராசரி வெப்பநிலை அளவு 25 டிகிரி சென்டிகிரேடும் அதற்கு அதிகமாகவோ இருந்தால் இந்த இரு மாநிலங்களிலும் கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளதாக ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானி ஹேமந்த் பெர்வானி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘வெப்ப நிலையை மட்டும் வைத்துக் கொண்டு நாங்கள் ஆய்வை மேற்கொள்ளவில்லை. சமூக விலகலை மக்கள் எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பதையும் ஆய்வில் எடுத்துக் கொண்டோம். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் தொற்று எளிதாக பரவும். எனவே, மக்கள் சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றவில்லை என்றால் வெப்பநிலை அதிகரித்தாலும் பலன் இருக்காது’’ என்றார்.