Published : 29 Apr 2020 04:59 PM
Last Updated : 29 Apr 2020 04:59 PM

‘‘உணவில்லை; சொந்த ஊர்களுக்கு அனுப்பி வையுங்கள்’’ - ஹைதராபாத்தில் 2400 தொழிலாளர்கள் போராட்டம்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த 2 ஆயிரத்து 400 தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதிலிருந்து உள்ளூர் தொழிலாளர்கள் முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் வரை பலரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி வருகிறது.

மும்பை பாந்த்ராவில் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி வெளி மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளி மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை என்பதால் இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். சமூக விலகலை கடைபிடிக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் ஹைதராபாத்திலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத் ஐஐடி கட்டுமான பணிக்காக சுமார் 2 ஆயிரத்து 400 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஹைதரபாத் வந்து தங்கியுள்ளனர். கரோனா ஊரடங்கால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சாப்பிட கூட உணவின்றி தவிப்பதாகவும் கூறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். உடனடியாக போலீஸார் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சமாதானம் செய்யவும், அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசும், காவல்துறையும் உறுதியளித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x