கரோனா வைரஸ் | முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ .5000 அபராதம்: கேரளா வயநாடில் போலீஸார் அதிரடி

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்விதமாக பொது இடங்களில் முகமூடி அணியாத நபர்களுக்கு ரூ .5000 அபராதம் விதிக்கப்படும் என்று வயநாடு காவல்கண்காணிப்பாளர் இளங்கோ புதன்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக கரோனா பாதிக்கப்பட்ட மாநிலம். ஆனால் கேரளா தற்போது கரோனாவை விரட்டியடிப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் மொத்தம் 485 கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 359 பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் கோவிட் 19 பரவல் பெருமளவில் குறைந்துள்ள போதிலும் வயநாடு போன்ற பகுதிகளில் முன்னெச்சரிக்கை காரணமாக கடுமையான விதிமுறைகளில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து வயநாடு காவல் கண்காணிப்பாளர் இளங்கோ கூறியதாவது:

கேரள போலிஸ் சட்டம் (கே.பி.ஏ) 118 இ மற்றும் காவல்துறையின் உத்தரவுப்படி முகக்கவசம் அணியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். கேரள போலீஸ் சட்டப்படி முகக்கவசம் அணியாத நபரிடமிருந்து ரூ .5000 அபராதம் வசூலிக்கப்படும்.

நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர நபர் விரும்பினால், சட்டத்தின் படி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அந்த நபர் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ .10,000 அபராதம் செலுத்துதல் அல்லது இரண்டையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

இது தவிர, கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் கைகளைச் சுத்தம் செய்யும் கிருமிநாசினி அல்லது சோப்புகள் வழங்காவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு வயநாடு காவல் கண்காணிப்பாளர் இளங்கோ தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in