Published : 29 Apr 2020 08:43 AM
Last Updated : 29 Apr 2020 08:43 AM

முஸ்லிம்களிடம் காய்கறிகளை வாங்காதீர்கள்: உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் தியோரியா தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் சுரேஷ் திவாரி. கடந்த வாரம் தனது தொகுதிக்குச் சென்ற இவர், அங்குள்ள மக்களிடையே கரோனா வைரஸ் தொற்று குறித்து உரையாடினார். அப்போது, “கரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால் முஸ்லிம் வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கக் கூடாது” என கூறினார். இவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக, சுரேஷ் திவாரி நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “முஸ்லிம் வியாபாரிகள் சிலர் காய்கறிகளில் எச்சில் உமிழ்ந்து விற்பதாக கேள்விப்பட்டேன். அதன் காரணமாகவே, அவர்களிடம் இருந்து காய்கறிகளை வாங்க வேண்டாம் எனக் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது? இதை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன” என்றார்.

பாஜக நோட்டீஸ்

இதனிடையே, எம்எல்ஏ சுரேஷ் திவாரியின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு பாஜக தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், சுரேஷ் திவாரியின் இந்தக் கருத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x