7-வது ஊதியக் குழுவுக்கு 4 மாதம் அவகாசம் நீட்டிப்பு

7-வது ஊதியக் குழுவுக்கு 4 மாதம் அவகாசம் நீட்டிப்பு

Published on

ஏழாவது ஊதியக் குழு தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை மேலும் நான்கு மாதங்களுக்கு கால அவகாசம் கொடுத்து மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு ஊதியக் குழுவை நியமிக்கிறது. அந்த ஊதியக் குழு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களின் சம்பள அளவில் திருத்தங்கள் செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கிறது. அந்தப் பரிந்துரைகளை சில மாற்றங்களுடன் மாநில அரசுகளும் பின்பற்றுகின்றன.

அந்த வகையில் 2016ம் ஆண்டுக்கான ஊதிய அளவை நிர்ணயிக்க, 2014ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசு ஏழாவது ஊதியக் குழுவை நியமித்தது.

இந்தக் குழுவுக்கு நீதியரசர் ஏ.கே.மத்தூர் தலைவராகவும், மீனா அகர்வால் செயலாளராகவும் உள்ளனர்.

இதுதொடர்பாக அந்தக் குழு ஏற்கெனவே பல்வேறு தரப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டது. இந்த மாத இறுதியில் அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு கொடுத்து, டிசம்பர் மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அமைச்சரவை அந்தக் குழுவுக்கு அனுமதியளித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in