Published : 28 Apr 2020 08:35 AM
Last Updated : 28 Apr 2020 08:35 AM

கரோனா மருந்து பரிசோதனை மே மாதத்தில் தொடங்கும்: சீரம் நிறுவனம் தகவல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைதலைமையிடமாகக் கொண்ட சீரம்இன்ஸ்டிடியூட், பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சீரம், நிமோனியா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகளை குறைவான விலையில் உற்பத்தி செய்து வழங்கி புகழ் பெற்றது.

இந்நிலையில், பிரிட்டனின்ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் தலைமையிலான கூட்டமைப்பு கரோனாவைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து கடந்த 23-ம் தேதி முதல் மனிதர்களுக்கு வழங்கி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பில் சீரம் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவாலா கூறும்போது, “இந்தியாவில் வரும் மேமாதம் முதல் கரோனா வைரஸ்தடுப்பு மருந்தை சில நூறுநோயாளிகளுக்கு வழங்கி பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால் மருந்து உற்பத்தியை தொடங்கி விடுவோம். வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில்2 கோடி முதல் 4 கோடி கரோனா தடுப்பு மருந்து தயாராகி விடும். இந்த மருந்தின் விலையை ரூ.1,000 ஆக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளோம்.

எம்எம்ஆர் உள்ளிட்ட தடுப்புமருந்துகள் பிற நாடுகளைவிட இந்தியாவில் 10 மடங்கு குறைவாக உள்ளன. இதுபோலவே, கரோனா தடுப்பு மருந்தும் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் குறைவாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x