Published : 27 Apr 2020 09:43 PM
Last Updated : 27 Apr 2020 09:43 PM

ரேபிட் டெஸ்ட் கிட் விலை சர்ச்சை; உண்மை என்ன?- மத்திய அரசு விளக்கம்

ரூ.400 மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கருவிகளை ரூ.600க்கு ஐசிஎம்ஆர் கொள்முதல் செய்ததும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், அரசியல் வட்டாரத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. நடந்தது என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை மக்களுக்கு முதல் கட்டமாகக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் சில நிறுவனங்கள் 150 சதவீத லாபத்தில் விற்பனை செய்துள்ளன என்று ஊடகங்களிலும் நாளேடுகளிலும் செய்தி வெளியானது. ரூ.225 மதிப்புள்ள இந்த ரேபிட் டெஸ்ட் கருவி ரூ.600க்கு விற்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

ரூ.400 மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கருவிகளை ரூ.600க்கு ஐசிஎம்ஆர் கொள்முதல் செய்தது. அதைப் பின்பற்றி தமிழகம் வாங்கியது. இது தொடர்பான வழக்கில், ரூ.400க்கு மேல் விலை வைத்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை விற்கக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

யாராவது இடைத்தரகர் கம்பெனி சம்பாதிக்க, மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பார்களா எனவும் நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டியும் அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர். இந்நிலையில், மத்திய அரசுத் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மத்திய அரசின் செய்திக்குறிப்பு:

“முதலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), தனது கொள்முதல் முடிவுகளை எந்த அடிப்படையில் எடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும். பரிசோதனை என்பது கோவிட்-19க்கு எதிரான போரில் மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகும். இந்தப் பரிசோதனைக்குத் தேவையான அனைத்தையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செய்து வருகிறது.

இதற்கு உபகரணங்களைக் கொள்முதல் செய்து, அவற்றை மாநிலங்களுக்கு வழங்குவது அவசியமாகும். உலக அளவில் இந்த உபகரணங்களுக்கு பெருமளவில் தேவை இருப்பதால், பல்வேறு நாடுகள் பண ரீதியிலும், ராஜாங்க வழியிலும் அவற்றை வாங்குவதற்கு தங்கள் முழு பலத்தையும், செல்வாக்கையும் ஈடுபடுத்தி வருகின்றன.

இந்த உபகரணங்களை வாங்குவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முதல் முயற்சிக்கு விநியோகஸ்தர்களிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இரண்டாவது முயற்சியில் தேவையான பதில் கிடைத்தது. இதில், உணர்திறன் மற்றும் தனித்திறன் அடிப்படையில், இரண்டு நிறுவனங்கள் (Biomedemics and Wondfo) கொள்முதலுக்காகக் கண்டறியப்பட்டன. இரண்டு நிறுவனங்களும் தேவையான சர்வதேச அளவிலான சான்றிதழைக் கொண்டிருந்தன.

Wondfo நிறுவனத்துக்காக மதிப்பீட்டுக் குழு நான்கு ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற்றது. அவை முறையே, ரூ.1204, ரூ.1200,ரூ.844, ரூ.600 ஆகும். அதன்படி, ரூ.600 என்ற விலைக் குறிப்பு எல்-1 ஆகப் பரிசீலிக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சீனாவில் உள்ள Wondfo நிறுவனத்திடம் இருந்து ஜிசிஐ மூலம் நேரடியாக உபகரணங்களைக் கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டது. இருப்பினும், நேரடிக் கொள்முதலுக்கான விலைக் குறியீடுகளில் சில பிரச்சினைகள் இருந்தன.

· விலைக்குறியீடு FOB (Free on Board) முறைப்படி, எடுத்துச்செல்லும் பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிடாமல் இருந்தது.

· விலைக்குறியீடு எந்தவித உத்தரவாதமும் இன்றி 100% நேரடி முன்பண அடிப்படையில் இருந்தது.

· காலவரம்பு பற்றிய எந்த ஒப்படைப்புப் பொறுப்பும் இருக்கவில்லை.

· விலை அமெரிக்க டாலரில் தெரிவிக்கப்பட்டதுடன், விலையில் ஏற்ற இறக்கம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

எனவே, எந்தவித முன் பணமும் இன்றி, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய FOB (logistics) விலை குறிப்பிட்ட Wondfoவின் உபகரணக் கொள்முதலுக்கான இந்திய விநியோகஸ்தரிடம் இருந்து அவற்றை வாங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு வேறு எந்த இந்திய முகமையும் மேற்கொள்ளாத முதல் முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏலதாரர்களால் குறிப்பிடப்பட்ட விலையே மேற்கோள் அம்சமாகும்.

இவற்றில் ஓரளவு உபகரணங்கள் பெறப்பட்டதும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கள நிலவர அடிப்படையில் மீண்டும் தரச்சோதனை மேற்கொண்டது. உபகரணங்களின் செயல்பாடு குறித்த அறிவியல் மதிப்பீட்டின் அடிப்படையில் , அவை சரியாகச் செயல்படாதது கண்டறியப்பட்டதும், அவற்றை வாங்குவதற்கான ஆர்டர் ரத்து செய்யப்பட்டது.

இந்தக் கொள்முதலுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எந்தத் தொகையும் செலுத்தவில்லை என்பது வலியுறுத்திக் கூறப்பட வேண்டியதாகும். விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதால், (கொள்முதலுக்கு முற்றிலும் முன்பணம் எதுவும் கொடுக்காமல்), மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பு இல்லை”.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x