பிரணாப் முகர்ஜி மனைவி உடல் தகனம்: மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அஞ்சலி

பிரணாப் முகர்ஜி மனைவி உடல் தகனம்: மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அஞ்சலி
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ராவின் உடல் நேற்று டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.

மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுவ்ரா முகர்ஜி (74) நேற்று முன்தினம் காலை காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்குக்குப் பிறகு, 13, தல்கடோரா சாலையில் உள்ள பிரணாபின் மகன் அபிஜித் வீட்டிலிருந்து லோதி சாலையில் உள்ள மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

அவரது சாம்பல், பிரணாப் குடும்பத்தினரால் ஹரித்வார் கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஈமச் சடங்குகள் நடத்தப்பட்டன.

இறுதிச் சடங்கில், துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சில மத்திய அமைச்சர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உட்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று காலை டெல்லி வந்தார். அவரை விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார். சுவ்ராவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஹசீனா, பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசி னார்.

கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வங்கதேசத்துக்குச் சென்றிருந்தார். அதன்பிறகு, மோடியும், ஹசீனாவும் சந்தித்துக் கொள்வது இது இரண்டாவது முறையாகும். பிரதமர் ஷேக் ஹசீனாவுடன், வெளியுறவு அமைச்சர் ஏ.ஹெச். மஹ்முத் அலி, தங்கை ஷேக் ரெஹானா, மகள் சாய்மா வாஸெத் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

கடந்த 1975-ம் ஆண்டு ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்டபிறகு, ஹசீனாவும் அவரது மகளும் தப்பி வந்து இந்தியாவில் அரசியல் அடைக்கலம் பெற்று சுமார் ஆறு ஆண்டுகள் டெல்லியில் வாழ்ந்தனர். அப்போதிருந்தே பிரணாப் குடும்பத்துடன் ஹசீனா நெருக்கமான உறவைப் பேணி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in