Published : 27 Apr 2020 07:44 PM
Last Updated : 27 Apr 2020 07:44 PM

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5000: நெகிழவைத்த சுதந்திரப் போராட்டத் தியாகி!

கரோனா மீட்புப் பணிகளுக்காக கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, 102 வயதான சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர் 5000 ரூபாய் வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் வயோதிகர்கள், நோயாளிகளுக்கு ஏற்படும் சிக்கலைப் போக்கும் வகையில் கேரள காவல்துறையினர் அவர்களது இல்லங்களுக்கே போய் அத்தியாவசியமான உதவிகளைச் செய்து கொடுக்கின்றனர்.

திருவனந்தபுரம், மலையான்கீழு காவல்நிலைய ஆய்வாளர் அனில்குமார் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அப்படி சேவை செய்துகொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகியான பரமேஸ்வரன் நாயர் (102) என்பவரின் வீட்டுக்கும் சென்றார்.

அவருக்கு மருந்து, மாத்திரை எதுவும் தேவை இருக்கிறதா என கேட்கச் சென்ற காவலர்களிடம் , “ஒரு நிமிடம்” என்று சொல்லிவிட்டுத் தனது அறைக்குச் சென்ற பரமேஸ்வரன், அரசு தனக்கு வழங்கி வரும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான பென்ஷன் தொகையில் சேமித்து வைத்திருந்தத பணத்தில் 5 ஆயிரம் ரூபாயை அவர்களிடம் கொடுத்து முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதியில் சேர்த்துவிடும்படி சொன்னார்.

அப்போது காவலர்களிடம் பேசிய அவர், “நான் படித்து முடித்ததுமே பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பணிசெய்தேன். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் மகாத்மா காந்தியின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டேன். உடனே, வேலையை விட்டுவிட்டு நாட்டு விடுதலைக்காக கேரளம் திரும்பிப் பாடுபட்டேன். இப்போது அதற்கான தியாகிகள் பென்ஷன் வருகிறது. இரண்டாம் உலகப் போரைப் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். கரோனாவில் உலக அளவில் நடந்துவரும் மரணங்கள் உலகப் போரையே மிஞ்சுவதுபோல் உள்ளது” என்றாராம்.

தியாகி பரமேஸ்வரன் நாயரின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5000 ரூபாய் வழங்கிய நிலையில், அவரது கருணைமிக்க சேவை கேரளத்தில் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x