Last Updated : 27 Apr, 2020 02:14 PM

 

Published : 27 Apr 2020 02:14 PM
Last Updated : 27 Apr 2020 02:14 PM

ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும்: மேகாலயா, ஒடிசா முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தல்

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, பிரதமர் மோடி : கோப்புப்படம்

ஷில்லாங்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள லாக் டவுனை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாக் டவுனை மத்திய அரசு கொண்டு வந்தது. கரோனா பாதிப்பு குறையாததையடுத்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை 2-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த லாக் டவுன் காலத்திலும் கரோனா வைரஸ் பாதிப்பு 26 ஆயிரத்தை எட்டியுள்ளது. 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு கொண்டுவருவதற்கு முன்பும், முதல் கட்ட லாக் டவுன் முடியும் முன்பும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் தேதிகளிலும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் கரோனா பாதிப்பு குறைவாகவும், பாதிப்பே இல்லாத மாவட்டங்களில் கடந்த 20-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தசூழலில் மே 3-ம் தேதிக்குப் பின் மீண்டும் லாக் டவுனை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா மே 3-ம் தேதிக்குப் பின்பும் லாக் டவுனை நீட்டிக்க வலியுறுத்தியுள்ளார்.

நவீன் பட்நாயக்

இதுகுறித்து கான்ராட் சங்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “மாநிலத்தில் கரோனா இல்லாத மண்டலங்களில் லாக் டவுன் தளர்த்தப்படும். ஆனால், பிரதமர் மோடியிடமும், அமித் ஷாவிடமும் பேசும் போது மே 3-ம் தேதிக்குப் பின் லாக்டவுனை நீட்டிக்க வலியறுத்தினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் உள்ள மேகாலயா சிறிய மாநிகமாக இருந்தாலும் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இன்று முதல் மேகாலயா அரசு, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை, சரக்குப் போக்குவரத்து, ஆன்லைனில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதியளித்துள்ளது

இதேபோல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் லாக் டவுனை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என வலியறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x