கோப்புப்படம்
கோப்புப்படம்

பதவியேற்புக்காக லாக் டவுனில் 2 ஆயிரம் கி.மீ. பயணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்

Published on

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் தலைமை நீதிபதிகளாகப் பதவி ஏற்க வேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சாலை மார்க்காக 2 ஆயிரம் கி.மீ. பயணித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வியாழக்கிழமை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தாவை மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிஸ்வாநாத் சோமேதரை மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமித்தார்

இந்த இரு நீதிபதிகளும் குறிப்பிட்ட நாளில் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க வேண்டும் என்பதற்காக சாலை மார்க்கமாக காரில் பயணித்துள்ளனர். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் தீபங்கர் தத்தா தனது மகனை காரை இயக்கக்கூறி குடும்பத்துடன் மும்பைக்குப் புறப்பட்டார். ஏறக்குறைய 2 ஆயிரம் கி.மீ பயணத்தை சனிக்கிழமை தொடங்கினார். இவர் தி்ங்கள்கிழமை பிற்பகலில் தான் மும்பை சென்று சேர்வார் எனத் தெரிகிறது.

அதேபோல அலகாதாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பிஸ்வாநாத் சோமேதர் கொல்கத்தா வழியாக ஷில்லாங் புறப்பட்டார். தனது மனைவி குடும்பத்தாருடன் காரில் புறப்பட்ட நீதிபதி பிஸ்வாநாத் நேற்று கொல்கத்தா வந்து சேர்ந்தார். அங்கு இரவு சால்ட்லேக் பகுதியில் ஓய்வெடுத்துவிட்டு, இன்று காலை ஷில்லாங் புறப்பட்டுச் சென்றார். இரு தலைமை நீதிபதிகளும் நாளை பதவி ஏற்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in