இந்து-முஸ்லிம் வேறுபாட்டையெல்லாம் மறந்து விடுங்கள், பிளாஸ்மா தானம் செய்யுங்கள், உயிரைக் காப்பாற்றுங்கள் - அரவிந்த் கேஜ்ரிவால் 

இந்து-முஸ்லிம் வேறுபாட்டையெல்லாம் மறந்து விடுங்கள், பிளாஸ்மா தானம் செய்யுங்கள், உயிரைக் காப்பாற்றுங்கள் - அரவிந்த் கேஜ்ரிவால் 
Updated on
1 min read

கரோனா வைரஸிலிருந்து மீண்டு குணமடைந்தவர்கள் ஜாதி, மத, பேதங்கள் பார்க்காமல் பிளாஸ்மாவை தானமாகக் கொடுத்து கரோனா வைரஸிலிருந்து உயிர்களைக் காக்க வேண்டும் என்ரு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா வைரஸ் சிகிச்சையில் இன்னும் மருந்துகள் இல்லை, வாக்சைன்கள் இல்லை, குணமடைந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்படும் ஒருவகையான குருதிகலந்த நிறமற்ற திரவம் எனும் பிளாஸ்மா சிகிச்சைக் கைக்கொடுக்கிறது.

இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் கூறும் போது, “பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள். நாமெல்லோரும் இந்த கரோனாவிலிருந்து மீண்டு உயிர் வாழ வேண்டும். நாளையே ஒரு இந்துவுக்கு கரோனா தொற்று, சீரியஸாக இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் ஒரு முஸ்லிமின் பிளாஸ்மா அவரது உயிரைக் காப்பாற்றும். அதே போல் பாதிக்கப்பட்ட முஸ்லிமுக்கு ஒரு இந்துவின் பிளாஸ்மா உதவும்.

கரோனாவுக்கு ஜாதி, மத, நாடுகள் என்ற பேதமெல்லாம் கிடையாது. பிளாஸ்மா சிகிச்சைக்கு நல்ல பலன் இருக்கிறது.

எல்என்ஜேபி மருத்துவமனையில் ஒரு கரோனா நோயாளி ஆபத்தான கட்டத்தில் இருந்தார். மருத்துவர்களும் அவர் மோசமடைந்து வருவதாக நம்பிக்கை இழந்தனர். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உடல் நிலை குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேற்றம் அடைந்தது. இதுதான் எங்களை பிளாஸ்மா சிகிச்சை நோக்கித் திருப்பியுள்ளது” என்று கூறினார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in