Published : 26 Apr 2020 08:01 AM
Last Updated : 26 Apr 2020 08:01 AM

சிறு, குறு தொழில் துறையை மீட்க நடவடிக்கை வேண்டும்: பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்

புதுடெல்லி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் நாள்தோறும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால் அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மூன்றில் ஒரு பங்கை எம்எஸ்எம்இ துறை வகிக்கிறது. எனவேஅந்தத் துறையை மீட்டெடுக்க வேண்டியது மத்திய அரசின்பொறுப்பாகும். அந்தத் துறையைச்சேர்ந்த 11 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அவர் 5 அம்ச நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தால் அந்தத் துறை சரிவிலிருந்து மீளும்.

முதலாவதாக எம்எஸ்எம்இ துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க மத்திய அரசுரூ.1 லட்சம் கோடியை ஒதுக்கவேண்டும். 2-வதாக அந்தத் துறைக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் உத்தரவாத நிதியை உருவாக்க வேண்டும். 3-வதாக எம்எஸ்எம்இ துறைக்குத் தேவையான கடன் உதவியை வர்த்தக வங்கிகள் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும். மேலும் இத்துறைக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடிய வகையில் ஹெல்ப்லைனை தொடங்க வேண்டும்.

நான்காவதாக கடன் தவணை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் நீட்டிக்க வேண்டும். மேலும் எம்எஸ்எம்இ துறை மீது விதிக்கப்படும் வரிகளை குறைக்க வேண்டும்.

ஐந்தாவதாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு கடன் மறுக்கப்படுகிறது. இந்தக் குறை சரி செய்யப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x