Published : 24 Apr 2020 05:10 PM
Last Updated : 24 Apr 2020 05:10 PM

கரோனாவை எதிர்த்து நாடே போராடுகிறது; மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் சண்டையிடுகிறது: ஜவடேகர் கடும் சாடல்

கரோனா வைரஸூக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ மத்திய அரசுக்கு எதிராக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் கரோனா ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸை நாம் ஒற்றுமையாக சமாளிக்கும்போது, பாஜக தொடர்ந்து வகுப்புவாத தப்பெண்ணம் மற்றும் வெறுப்பு வைரஸை பரப்புகிறது என விமர்சித்து இருந்தார். இதற்கு பாஜக மூத்த தலைவர்கள் கடும் பதிலடி கொடுத்தனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் ‘‘ஒருபக்கம் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு அதிகமான நிதி தேவைப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனாவசிய செலவுகளை செய்து வருகிறது. விஸ்தா போன்ற ஆராய்ச்சிகளுக்காக 23 ஆயிரம் கோடி செலவு செய்கிறது. புல்லட் ரயிலுக்கு 1 லட்சத்த 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. இதுபோன்ற திட்டங்களை நிறுத்த வேண்டும்.’’ எனக் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது
‘‘கரோனா வைரஸூக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ மத்திய அரசுக்கு எதிராக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. இது தான் காங்கிரஸின் செயல்பாடு. இந்த நேரத்தில் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள். பதில் சொல்பவர்கள் பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டுமா.’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x