Published : 24 Apr 2020 03:54 PM
Last Updated : 24 Apr 2020 03:54 PM

தேவையில்லாமல் தலையிட்டுப் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறீர்கள்: ஆளுநருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

மேற்கு வங்கத்தில் கரோனா பணிகள் மிகச் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றன. ஆனால், நீங்கள் தேவையில்லாமல் தலையிட்டுப் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறீர்கள் என்று அம்மாநில மம்தா பானர்ஜி ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இதுவரை 514 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். 103 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

கொல்கத்தாவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மம்தா பானர்ஜி சரியாக லாக் டவுன் விதிகளைப் பின்பற்றுவதில்லை போன்ற குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடர்ந்து எழுப்பிவரும் நிலையில், கொல்கத்தாவை ஆய்வு செய்ய மத்தியக் குழுவையும் அனுப்பியது.

மேலும், மக்களுக்கு ரேஷன் வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்டத்தை அமல்படுத்துவதிலும் நிறைய குளறுபடிகள் நிகழ்வதாகவும் மேற்கு வங்கத்தில் லாக் டவுனை மீறி பொது விநியோக முறையின் நிலைமை ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால் மாநிலம் முழுவதும் கரோனா சோதனை செய்யப்பட வேண்டும் எனவும் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கார் தனது ட்விட்டர் பதிவிலும் மம்தான பானர்ஜிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலிலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு ட்வீட்டில் மாநில அரசு, மத்தியக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநரின் கடிதங்களை வெளியிட்டார். அவற்றில் உள்ள வார்த்தைகள் பயன்படுத்தத் தகுதியில்லாத வார்த்தைகள் எனவும் கூறினார்.

முதல்வரால் பகிரங்கப்படுத்தப்பட்ட மற்றொரு தகவல் தொடர்பு ஏப்ரல் 22-ம் தேதி அன்று ஆளுநரால் அனுப்பப்பட்ட ஒரு எஸ்எம்எஸ் ஆகும். இதனை மம்தா பானர்ஜி, “தொனி, பற்றாக்குறை மற்றும் மொழி ஆகியவற்றில் முன்னோடியில்லாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநராக ஜெகதீப் தங்கார் பொறுப்பேற்றதிலிருந்தே மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் சரியான உறவு அமையவில்லை. தொடர்ந்து கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருப்பவராகவே அவரும் செயல்பட்டு வந்தார். தற்போது லாக் டவுன் விதிமுறைகள் சம்பந்தமாக அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை எனவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து ஆளுநருக்கு 5 பக்கக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

மம்தா பானர்ஜி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

''மாநிலத்தில் கரோனா பணிகள் மிகச் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றன. ஆனால், நீங்கள் தேவையில்லாமல் தலையிட்டுப் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறீர்கள்.

அரசியலமைப்பு நடத்தைக்கான அடிப்படை விதிமுறைகளை மீறுபவர்கள் யார் என்பதை இந்த மாநிலத்தின் மக்களும் தேசத்தின் மக்களும் தீர்ப்பு வழங்க தகுதி படைத்தவர்கள் ஆவர்.

நான் ஒரு பெருமைமிக்க இந்திய மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்பதை நீங்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. நீங்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதையும் நீங்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது,

அரசியலமைப்புச் சபையில் அதிகாரப் பகிர்வு குறித்து பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் சர்க்காரியா ஆணையம் உரிய பரிந்துரைகளை வழங்கியுள்ளன. ஆனால், உங்களது கருத்துகளைப் பார்க்கும்போது, என் மீதும், என் அமைச்சர்கள் மீதும் நேரடித் தாக்குதல்கள் தொடுப்பது மற்றும் நிர்வாகத்தில் நீங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து தலையிடுவது ... அரசியலமைப்பு தர்மத்தை யார் மிக மோசமாக மீறிவிட்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

உங்கள் தொனி, பற்றாக்குறை மற்றும் மொழி ஆகியவற்றின் மீது மிகுந்த மிதமான சொற்களில், அவற்றில் பயன்படுத்தத் தகுதியிலலாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ள நீங்கள் தகுதியானவரா என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.

மாநில அரசுக்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்புகளை தாங்கள் நடத்தியுள்ளீர்கள். இது சரியானதா என்பதையும் தாங்கள்தான் பரிசீலிக்க வேண்டும்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x