

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) கே.வி. சவுத்ரி, ஊழல் கண்காணிப்பு ஆணையர் டி.எம். பாஷின் ஆகியோரின் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விளக்கம் கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
கே.வி. சவுத்ரி மற்றும் டி.எம். பாஷின் இருவருமே கறைபடிந்தவர்கள், நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை, இதுபோன்ற முக்கியமான பதவியின் நியமனத்துக்கு வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட வில்லை, இந்த நியமனங்கள் சட்டவிரோதமானைவை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மனுதாரர் தரப்புக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதி கோரினார்.
முன்னதாக, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணிடம், இதுதொடர்பான ஆவணங்களைப் பார்வை யிடுவதற்காக உரிய மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர்