Published : 24 Apr 2020 08:06 AM
Last Updated : 24 Apr 2020 08:06 AM

கரோனா வைரஸ்: அமெரிக்கப் பாதையில் இந்தியா செல்வதாக சீன நிபுணர் கருத்து

கரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா அமெரிக்காவின் பாதையில் செல்கிறது என்று சீன தொற்று நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே இந்தியாவில் கரோனாவின் சமூக பரவலுக்கான அறிகுறிகள் உள்ள நிலையில் அமெரிக்கா, ஐரோப்பாவின் வழியில் இந்தியா செல்ல வாய்ப்புள்ளதாக சீனாவின் கோவிட்-19 முன்னணி நிபுணர் ஸான் வென்ஹாங் தெரிவித்துள்ளார், அதாவது குறைந்த எண்ணிக்கையில் கேஸ்களை குறைப்பதற்குப் பதிலாக அதிகமாகும் ஐரோப்பிய, அமெரிக்கப் பாதையில் செல்வதாக சன் வென்ஹாங் தெரிவித்தார். இவர் ஷாங்காய் ஹுவாஷான் மருத்துவமனையின் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவில் இருக்கும் சூழ்நிலை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவின் நிலையுடன் ஒத்துப் போகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணமும் வித்தியாசமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. சில மாகாணங்கள் கண்டிப்பான லாக்-டவுனில் உள்ளன, சில மாகாணங்கள் திறந்து விடப்பட்டுள்ளன. இந்தியாவும் கொள்ளை நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடைமுறையில் அதிகவிலை கொடுக்காமல் பொருளாதரம் எப்படிச் செயல்படுகிறது, கொள்ளை நோயை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை ஆராய வேண்டும்.

இந்தியா தொலைநோக்குடன் செயல்படுவது அர்த்தபூர்வமாக உள்ளது. சீனாவின் அதிரடி லாக்-டவுன் அளவுகோல்கள் போல் அல்லாமல், பெரிய பெரிய தனிமைப்படுத்தல்கள் இல்லாமல் இந்தியாவின் அணுகுமுறை அதன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உள்ளது. ஒவ்வொரு நாடும் அதற்குரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சீனாவின் 100% லாக் டவுன், எண்ணிக்கையை குறைக்கும் வரை லாக் டவுன் என்ற ஆஸ்திரேலிய அணுகுமுறை ஆகியவற்றை அனைத்து நாடுகளும் கடைபிடிக்க முடியாது.

என் தனிப்பட்ட கருத்து என்னவெனில் இது போன்ற ஒட்டுமொத்த நடைமுறைக்கு இந்தியா செல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன். அமெரிக்காவின் உத்தியை இந்தியா கடைப்பிடிப்பதாகவே உணர்கிறேன்.

கரோனா பாதிப்பு எண்ணிக்கையை மட்டும் பார்க்காதீர்கள். இந்தியாவை விட இன்னும் ஆயிரக்கணக்கான கேஸ்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும். ஆனால் ஐரோப்பியர்கள் வாழ்க்கை நின்று போய் விடவில்லை, அங்கு பணி, தொழில், பள்ளிகளைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள்” என்றார்.

இந்தியாவில் உள்ள சீன குடிமக்களிடம் ஆன்லைன் உரையாடல் மேற்கொண்ட ஸான் வென்ஹாங் இதனைத் தெரிவித்தார்.

உலக அளவில் கொள்ளை நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறும் வென்ஹாங், கணிக்கப்பட்ட நோய்த்தொற்றுக்கள் அதிகமாகும் போது மரண விகிதம் குறையும் என்கிறார். 2003-ல் உருவான சார்ஸ் அளவுக்கு இது இல்லை, சார்ஸ் இளம் வயதினர் முதல் வயதானோர் வரை அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதனால்தான் சில நாடுகள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளையும் கல்வி நடவடிக்கைகளையும் தொடங்குகின்றனர், என்றார்.

இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் என்று கூறப்படுகிறதே என்று கேட்கப்பட்டதற்கு, “இது சீனாவில் விவாதிக்கப்பட்டு வருவதாகும். ஆனால் இந்தியாவில் கரோனா பாதிப்பு சந்தர்ப்பங்கள் எதிர்ப்பு சக்தி இந்தியர்களுக்கு அதிகம் என்பதற்கு தோதாக இல்லை. ஆனால் இந்திய மக்கள் இது குறித்து அமைதியாகவும் நிதானமாகவும் கையாள்வது என்னை மிகவும் ஈர்க்கிறது. இது அவர்கள் உடல் நோய் தற்காப்புத் தன்மையை விட, ‘ஆன்மீக தற்காப்புத் தன்மை’ அதிகம் இருப்பதைக் காட்டுகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x