தீவிரவாத தாக்குதல், கலவரங்களை தடுக்க மேலும் 6 ஆளில்லா உளவு விமானங்களை வாங்குகிறது டெல்லி காவல் துறை

தீவிரவாத தாக்குதல், கலவரங்களை தடுக்க மேலும் 6 ஆளில்லா உளவு விமானங்களை வாங்குகிறது டெல்லி காவல் துறை
Updated on
1 min read

டெல்லியில் தீவிரவாத தாக்குதல் மற்றும் கலவரங்களை தடுப்பதற்காக மேலும் 6 ஆளில்லா உளவு விமானங்களை அம்மாநில காவல்துறை வாங்கவுள்ளது.

நாட்டின் தலைநகராக விளங்கும் டெல்லியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது அம்மாநில காவல்துறைக்கு சவாலான பணியாக இருந்து வருகிறது. எனவே டெல்லி காவல் துறையில் கடந்த ஆண்டு, நாட்டில் முதல்முறையாக ஆளில்லா உளவு விமானங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. டெல்லியின் 5 மாவட்டங்களில் தலா 1 வீதம் மொத்தம் 5 விமானங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்கவும் மதக்கலவரங்களை கட்டுப்படுத்தவும் டெல்லி போலீஸாருக்கு இவை உதவியாக உள்ளன.

குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபரில் டெல்லியின் திரிலோக்புரியில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் இந்த உளவு விமானங்கள் செய்த பணி மிகவும் முக்கியத்துவம் பெற்றது. இதனால் டெல்லியில் இந்த விமானங்கள் பயன்பாட்டில் இல்லாத எஞ்சிய 6 மாவட்டங்களிலும் இவற்றை பயன்படுத்தும் வகையில் மேலும் 6 விமானங்கள் வாங்க டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “பிரதமர் திறந்தவெளியில் கலந்துகொண்ட சர்வதேச யோகா தின விழாவில் அவருக்கு பாதுகாப்பு அளிக்க இந்த விமானங்கள் பெரிதும் உதவின. எனவே இவற்றை தேவைக்கேற்ப வாங்க டெல்லி காவல்துறை துணை ஆணையர்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுள்ளது. இதற்கான சிறப்பு உத்தரவை, காவல்துறையின் சட்டம் ஒழுங்கு சிறப்பு ஆணையர் தீபக் மிஸ்ரா சமீபத்தில் பிறப்பித்துள்ளார்.

டெல்லியில் இருள் சூழ்ந்த பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தற்போது 170-ல் இருந்து 350 ஆக அதிகரித்துள்ளன. இந்த இருட்டுப் பகுதிகள், அரசியல் கூட்டம் மற்றும் ஊர்வலங்கள் ஆகியவை இந்த விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும். பயணிகள் விமானங்களின் பாதையில் இவை பறந்து விடாதபடி கவனத்தில் கொள்ளப்படும். இதற்காக அவற்றை இயக்குபவர்களுக்கு உகந்த பயிற்சி அளிக்கப்படும்” என்றனர்.

இந்த விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட உள்ளது. இதில் வெளிநாட்டு நிறுவனங்களும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விமானங்கள் எந்த நாட்டின் தயாரிப்பாக இருந்தாலும், அதன் திறமையான பயன்பாட்டை மட்டும் கவனத்தில் கொள்ளுமாறு டெல்லி காவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருப்பது இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

டெல்லியில் இந்த ஆளில்லா உளவு விமானங்கள் பயன்படுத்த தொடங்கியபோது தனியார் சிலரும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை படம் பிடிக்க ஓரிருமுறை இவற்றை பயன்படுத்தியதாக தெரிகிறது. ஆனால் இவற்றை தனியார் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், மீறினால் அவற்றை போலீஸார் சுட்டுத் தள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in