Last Updated : 23 Apr, 2020 01:20 PM

 

Published : 23 Apr 2020 01:20 PM
Last Updated : 23 Apr 2020 01:20 PM

முதல்கட்ட லாக்டவுனிலேயே 12 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோனது; வகுப்புவாத பாரபட்ச வைரஸையும், வெறுப்பையும் பாஜக பரப்புகிறது: சோனியா காந்தி குற்றச்சாட்டு

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு பதிலாக, வகுப்புவாத தவறான எண்ணங்கள் எனும் வைரஸையும், வெறுப்புணர்வையும் பாஜக பரப்பி வருகிறது. சமூக ஒற்றுமைக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி இருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்

மேலும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட முதல் கட்ட லாக்டவுனிலேயே 12 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோய்வி்ட்டன என்றும் சோனியா தெரிவித்தார்

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்து தலைவர்களும் காணொலி மூலம் பங்கேற்று கருத்துக்களைத் தெரிவித்தனர். கரோனா வைரஸ் காலத்தில் 2-வது முறையாக காணொலி மூலம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உள்ளி்ட்ட மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:


ஒவ்வொரு இந்தியவரும் வருத்தப்படும் சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொளள வேண்டும். கரோனா வைரஸால் உருவாகிய பொருளாதார பாதிப்பை சரி செய்ய அனைவரும் போராடி வரும் நிலையில், சமூகத்தில் வகுப்புவாத தவறான எண்ணங்களையும், வெறுப்பு வைரஸை பாஜக தொடர்ந்து பரப்பி வருகிறது.

பொருளாதார பாதிப்பை சரி செய்ய ஒவ்வொரு இந்தியரும், ஒவ்வொரு கட்சியும் உழைத்துவரும் போது இதுபோன்ற செயல்கள் கவலையளிக்கிறது. பாஜகவி்ன் செயல்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைத்திருக்கிறது. இந்த சேதங்களை சரி செய்ய காங்கிரஸ் கட்சி கடினமாகப் பணியாற்றும்.

கடந்த 3 வாரங்களாக கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது, இதைத் தடுக்க பரிசோதனையைத் தீவிரப்படுத்துங்கள் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.லாக்டவுன் கொண்டுவரப்பட்டதிலிருந்து பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும், ஆக்கப்பூர்வான கூட்டுறவு கோரியும் பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன்.

துரதிர்ஷ்டமாக அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைகளை பாதியளவுதான் ஏற்றார்கள், மற்றபடி மோசமான வழியில்தான் செல்கிறார்கள். இரக்கம், பெருந்தன்மை, எதற்கும் உற்சாகமாகத் தயாராவது போன்றவை மத்திய அரசிடம் வெளிப்படவில்லை. மக்களுக்கு சுகதாரம், உணவுப்பாதுகாப்பு, வாழ்வாதார விஷயங்கள் உறுதிபட கிடைக்க வகை செய்ய நோக்கமாக வைத்து காங்கிரஸ் கட்சி செயல்படும்

முதல்கட்ட லாக்டவுன் கொண்டுவரப்பட்டபோதே நாட்டில் 12 பேருக்கு வேலைபோய்விட்டது. குறு,சிறு, நடுத்தர தொழில்களுக்கு அரசு பொருளாதார நிதித்தொகுப்பை வழங்க வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பல மாநில எல்லைகளில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, நிதிப்பாதுகாப்பு, வேலை ஆகியவற்றை வழங்கி உதவிட வேண்டும்.

கரோனா வைரஸை ஒழிக்க பரிசோதனை, கண்காணித்தல், தனிமைப்படுத்துதல் இதைத்தவிர மாற்றுவழியில்லை என்று பிரதமர் மோடியிடம் தொடர்ந்த கூறியிருக்கிறோம். ஆனால் இன்னும் தொடர்ந்து பரிசோதனை அளவு குறைவாகவே இருக்கிறது, பரிசோதனைக் கருவிகள் தட்டுப்பாடு இருந்து வருகிறது

நாட்டின் வர்த்தகம், தொழில், வியாபாரம் ஆகியவை நின்றுவி்ட்டன, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிந்துவிட்டது. மே 3-ம் தேதிக்குப்பின் சூழலை எவ்வாறு கையாளப்போகிறது என்பதற்கு மத்திய அரசிடம் தெளிவான சிந்தனை இல்லை. லாக்டவுன் மே 3-ம் தேதிக்குப்பின் முடிந்துவிட்டால் அதன்பின் நிலைமை மோசமாக இருக்கும்

பொருளாதார நடவடிக்கைகள் மேலும் தேக்கமடையும் போது, நாட்டில் வேலையின்மை தொடர்ந்து அதிகரி்க்கும். குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 வழங்கிட வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x