Published : 22 Apr 2020 06:21 PM
Last Updated : 22 Apr 2020 06:21 PM

ஊரடங்கிலும் உறுப்பு தானம்: மார்க்கம் அனுமதிக்காத போதும் கொள்கைப் பிடிப்பால் நெகிழவைத்த முஸ்லிம் குடும்பம்

கேரளத்தில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிஐடியு நிர்வாகி அப்துல் மஜீத்தின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளன.

உடல் உறுப்பு தானத்தை இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காத நிலையில், அப்துல் மஜீத் தன் வாழ்வில் ஏற்றுக்கொண்ட கொள்கையின் அடிப்படையில் அவரது உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்தனர்.

கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத் (56) மீன்பிடித் தொழிலாளி. இவர் மீன்பிடித் தொழிலாளர் சங்கத்திற்கான சிஐடியு அமைப்பின் மாவட்டச் செயலாளர், மாநில மீனவர் நலவாரிய இயக்குநர் எனப் பல்வேறு அமைப்புகளிலும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், கரோனா ஊரடங்கு காலத்தில் வேலையின்றித் தவிக்கும் மீனவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கேரள மாநில மீன்வளத்துறை அமைச்சர் மெர்சிகுட்டியைச் சந்தித்து மனு அளித்தார் மஜித். மீண்டும் திரும்பிச் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அப்துல் மஜீத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது நிலையை அவரது உறவினர்களிடம் விளக்கிக் கூறிய மருத்துவர்கள், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் மரணத்தை எதிர்பார்த்து நாட்களைக் கடத்தும் ஆறு பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் என்று கூறினார்கள்.

மார்க்கம் அனுமதிக்காத நிலையிலும், மஜீத்தின் கொள்கைப் பிடிப்பான வாழ்வை முன்னிறுத்தி ஆலோசித்த அவரது குடும்பத்தினர் தீவிர ஆலோசனைக்குப் பிறகு மஜீத்தின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய சம்மதித்தனர்.

அதன்படி, மஜீத்தின் சிறுநீரகம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவருக்கும், கல்லீரல் கொச்சி லேக் ஷெயர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கும், இரண்டு இதய வால்வுகள் திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெறும் இருவருக்கும், இரண்டு கண்கள் கார்னியா திருவனந்தபுரம் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவருக்கும் வழங்கப்பட்டது.

ஊரடங்கு சமயத்தில் சிறப்பு அனுமதி பெற்று ஆம்புலன்ஸ்களில் இந்த உடல் உறுப்புகள் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

மார்க்கம் அனுமதிக்காவிட்டாலும், கொள்கைப் பிடிப்பால் அப்துல் மஜீத் ஆறு பேருக்கு வாழ்வு கொடுத்துவிட்டுப் பிரிந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x