கரோனா; அசாமில் கடந்த 7 நாட்களில் புதிய தொற்று இல்லை

அசாம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று ஊடகங்களிடம் பேசியபோது | படம்: ஏஎன்ஐ
அசாம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று ஊடகங்களிடம் பேசியபோது | படம்: ஏஎன்ஐ
Updated on
1 min read

கடந்த 7 நாட்களில் புதியதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று எதுவும் ஏற்படவில்லை என அசாம் மாநில அரசு தெரிவித்தது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1383 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், 50 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் இதுவரையிலான கரோனாவைரஸ் தொற்று 19,984 பேருக்கு பாதித்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அசாமில் கடந்த 7 நாட்களாக புதியதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா புதன்கிழமை கூறியதாவது:

மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்தும் விதம் சிறப்பாகவே உள்ளது. இதுவரை மொத்தம் 5,789 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 214 பேரின் முடிவு இன்னும் ஆய்வகத்தில் உள்ளது. இது அசாமுக்கு மட்டுமானதல்ல. மிசோரம், மேகாலயா மற்றும் நாகாலாந்து மக்களின் முடிவுகளை உள்ளடக்கியது.

அண்மையில் மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அசாமிலும் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏப்ரல் 25 ஆம் தேதி கவுகாத்தி மீட்கால் கல்லூரியில் செய்தியாளர்களுக்கு இலவச கோவிட் 19 சோதனைகளை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அசாம் மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in