Last Updated : 22 Apr, 2020 01:07 PM

 

Published : 22 Apr 2020 01:07 PM
Last Updated : 22 Apr 2020 01:07 PM

6 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை ஊருக்கு அனுப்ப உடனடியாக முடிவெடுங்கள்: மத்திய அரசிடம் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

6 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை ஊருக்கு அனுப்ப உரிய வழி சொல்லுங்கள் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதிலிருந்து உள்ளூர் தொழிலாளர்கள் முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் வரை பலரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில் மும்பையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 6 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் விரைவில் சொந்த இடம் செல்லவேண்டும் என விரும்புகின்றனர். அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தெரிவித்தால் உடனடியாக அவர்களை ஊருக்கு அனுப்பத் தயாராக உள்ளதாக கூடுதல் செயலாளர் மனோஜ் ஜோஷி தலைமையிலான மத்தியக் குழுவிடம் காணொலி உரையாடலில் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் காணொலி உரையாடலில் கூறியதாவது:

''மகாராஷ்டிர அரசாங்கம் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம், முகாம்களைத் திறந்து விட்டுள்ளது. அவர்கள் நன்கு கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

லாக் டவுனை அடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்புவது குறித்து இந்த மாத இறுதிக்குள் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.

ஆனால், இந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். மேலும் சில முறை எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை கரோனா வைரஸ் பரவுதல் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசு உணர்ந்தால், சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை அதற்கு முன்னர் தங்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப முடியுமா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். முடிந்தால், இது தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும்.

சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களைக் கடைசி வரை நாமே கண்காணித்துக் கொண்டிருக்க முடியுமா என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் வீடுகளை அடைந்த பிறகு கரோனா வைரஸின் பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்த நிச்சயம் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

மத்திய அரசு உரிய நேரத்தில் ஒரு முடிவை எடுத்தால் அவர்களை ஊருக்கு அனுப்பிவைக்க விரும்புகிறேன்''.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x