Published : 21 Apr 2020 05:18 PM
Last Updated : 21 Apr 2020 05:18 PM
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காக்க நடத்தப்படும் முக்கியமான பிளாஸ்மா சிகிச்சை நாட்டிலேயே முதல் முறையாக கரோனா நோயாளிக்கு வழங்கப்பட்டது. அவரும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து உடல் நலன் தேறி வருகிறார்.
பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?
நம் ரத்தத்தில் பிளாஸ்மா 60 சதவீதமும், ரத்த செல்கள் 40 சதவீதமும் உள்ளன. கரோனாவைப் பொறுத்த அளவில் ரத்த வெள்ளை அணுக்கள் முக்கியமானவை. கரோனா வைஸ் பாதிக்கப்பட்டு குணமான ஒருவரின் ரத்தத்தில் கரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உற்பத்தியானதால்தான் அவர் குணமாகியுள்ளார்.
ஆகவே, அவருடைய ரத்த பிளாஸ்மாவில் கரோனாவைக் கொல்லும் அளவுக்கு ஆன்டிபாடிகள் இருக்கும். இப்போது மற்றொரு நோயாளிக்குப் போதிய ஆன்டிபாடிகள் இல்லை என்பதால்தான் கரோனா பாதித்துள்ளது.
இவருக்கு கரோனாவில் மீண்டெழுந்தவரின் பிளாஸ்மாவைச் செலுத்தினால் பிளாஸ்மாவின் ஆன்டிபாடிகள் அவருடைய உடலுக்குள் சென்றதும் அங்குள்ள கரோனா கிருமிகளை எதிர்த்துப் போரிட்டு உடலில் ஏற்கெனவே இருக்கும் ஆன்டிபாடிகளுடன் இணைந்து புதிய உத்வேகத்துடன் போரிட்டு வெல்லும். அவர் குணமடைவார். இதுதான் பிளாஸ்மா சிகிச்சையின் பலன்.
ஏற்கெனவே சார்ஸ், மெர்ஸ், பன்றிக்காய்ச்சல் போன்றவை பெருந்தொற்றாகப் பரவியபோதும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் உள்ள சாகேத் பகுதியில் இருக்கும் மேக்ஸ் மருத்துவமனையில்தான் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துமனையின் இயக்குநர் மருத்துவர் சந்தீப் புத்திராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
“ கடந்த 4-ம் தேதி 49 வயது மதிக்கத்தக்க ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் காய்ச்சலும், மூச்சுவிடுதலில் சிரமமும் இருந்தது. அடுத்த சில நாட்களில் இவரின் நிலைமை மோசமடைந்து வென்டிலேட்டர் சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டது.
நோயாளியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத சூழலில் அவரின் குடும்பத்தினர் பிளாஸ்மா சிகிச்சையளிக்கக் கேட்டுக்கொண்டனர். நாட்டிலேயே நாங்கள்தான் முதல் முறையாக கரோனா வைரஸுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப் போகிறோம் என்பதால் தயக்கம் இருந்தது.
இருப்பினும், அரசின் அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி பிளாஸ்மா சிகிச்சை அளித்தோம். இதற்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கரோனாவில் இருந்து குணமடைந்தவரை அழைத்து அவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவைப் பெற்றோம். ரத்தம் எடுக்கும் முன் பிளாஸ்மா தானம் அளிப்போருக்கும் நெகட்டிவ் இருப்பதை உறுதி செய்தோம். பின்னர் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் பிளாஸ்மாவைச் செலுத்தினோம்.
பிளாஸ்மா ஏற்றப்பட்ட சில நாட்களில் கரோனா நோயாளிக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை நீக்கப்பட்டது. உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சாப்பிடும் அளவுக்கு உடல் தேறிவிட்டது. இதுபோன்ற சவாலான நேரங்களில் இந்தச் சிகிச்சையின் மூலம் கிடைத்த வெற்றி நம்பிக்கயை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை இருமுறை பிரசோதனை செய்தபோதும் நெகட்டிவாக இருந்தது நம்பிக்கையளிக்கிறது
அதேசமயம், பிளாஸ்மா சிசிச்சை செய்யும்போது பல்வேறு விதமான காரணிகளை ஆய்வு செய்தபின்புதான் தொடங்க முடியும். கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர் உடலின் ரத்தத்தில் இருந்து 400 மி.லி. பிளாஸ்மா வரை எடுத்து, அதன் மூலம் இரு நோயாளிகளைக் குணப்படுத்த முடியும்’’.
இவ்வாறு சந்தீப் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT