Published : 20 Apr 2020 09:31 PM
Last Updated : 20 Apr 2020 09:31 PM

கரோனா; மாலத்தீவுக்கு இந்தியா அனுப்பிய மருந்து, மருத்துவக்குழு: அதிபர் இப்ராகிமுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சொலிஹ் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது தங்களது நாடுகளில் தற்போதைய கரோனா பாதிப்பு நிலைமைகளைப் பற்றி இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.

சார்க் நாடுகளுக்கிடையே ஒத்துக்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு முறைகள் நன்றாக அமல்படுத்தப்படுத்தப்படுவதாக அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

மாலத்தீவுக்கு ஏற்கெனவே அனுப்பப்ப‌ட்ட இந்திய மருத்துவக் குழுவும், இந்தியாவால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகளும், தீவுகளில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பங்காற்றியதை அறிந்து பிரதமர் மகிழ்ச்சி அடைந்தார்.

மாலத்தீவைப் போன்ற சுற்றுலாவை சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரும் தொற்று விடுத்துள்ள கடினமான சவால்களைப் பற்றி பேசிய பிரதமர், கரோனாவால் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்பை குறைக்க இந்தியாவின் ஆதரவு தொடருமென‌ மாலத்தீவு அதிபருக்கு உறுதி அளித்தார்.

தற்போதைய சுகாதார சிக்கல்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பின் இதர அம்சங்கள் குறித்தும் தங்களது அலுவலர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x