

நாட்டின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மெதுவாக தொடங்கும் முயற்சி நடந்து வரும்நிலையில் சரக்கு போக்குவரத்துக்கு ஏதுவாக தாபாக்கள், வாகனங்கள் பழுது நீக்கும் கடைகளின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மாநில அரசுகள், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் நாடு முழுவதும் நடத்தப்படும் சாலையோர உணவு விடுதிகள், வாகனங்கள் பழுது நீக்கும் இடங்கள் ஆகியவற்றைக் கொண்ட பட்டியலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தனது வலைதளத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் பட்டியலை https://morth.nic.in/dhabas-truck-repair-shops-opened-during-covid-19 என்ற முகவரியில் அணுகலாம்.
கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஏற்பட்டுள்ள தற்போதைய சவாலான நிலைமையைச் சமாளிக்கத் தேவையான சரக்குகளை நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.
நெடுஞ்சாலைகளுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினருடன், குறிப்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுடன் வழக்கமான தொடர்பு வைத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்பட்ட தகவல்களை சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வலைதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேசிய நெடுங்சாலைகளில் உள்ள சாலையோர உணவு விடுதிகள், வாகனங்கள் பழுது நீக்கும் இடங்கள் குறித்த தகவல்களை வாகன ஓட்டிகளும் அவர்களது உதவியாளர்களும் பெறுவதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 1033 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது.