Last Updated : 17 Apr, 2020 05:29 PM

 

Published : 17 Apr 2020 05:29 PM
Last Updated : 17 Apr 2020 05:29 PM

கரோனாவை வென்ற தாய்ப் பாசம்: உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது மகனை 6 மாநிலங்களைக் கடந்து 2,400 கி.மீ. பயணித்து சந்தித்த 50 வயதுப் பெண்: கேரள அரசு, விஹெச்பி அமைப்பு உதவி

பிரதிநிதித்துவப்படம்

திருவனந்தபுரம்,

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகனைக் காண 6 மாநிலங்களைக் கடந்து, 2,400 கி.மீ. காரில் பயணித்து 50 வயதுப் பெண் சந்தித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றையும் கண்டுகொள்ளாமல் ஏற்கெனவே தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ரஸியா சுல்தானா (50) 1400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்து ஆந்திராவில் உள்ள ரெஹ்மாதபாதின் நகரில் இருந்த மகனை அழைத்து வந்து தாய்ப் பாசத்துக்கு முன்னுதாரணமாக இருந்தார்.

இப்போது இந்தத் தாய் தனது மகனுக்காக காரில் 2,400 கி.மீ. பயணித்து 6 மாநிலங்களைக் கடந்து தனது தாய்ப் பாசத்தால் கரோனாவை வென்றுவிட்டார்.

கரோனா வைரஸால் நாடு முழுவதும் லாக் டவுன் நடைமுறையில் இருந்தாலும், அரசு அதிகாரிகள், விஸ்வ இந்து அமைப்பினரின் உதவியுடன் சென்று தனது மகனை இந்த 50 வயதுப் பெண் சந்தித்துள்ளார். காரில் தனது மருமகளையும், உறவினர் ஒருவரையும், இரு ஓட்டுநர்களையும் அழைத்துச் சென்றார்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டம், கொருத்தோடு பஞ்சாயத்திலிருந்து கடந்த 14-ம் தேதி காரில் புறப்பட்ட இவர்கள் 5 பேரும், தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், வழியாக ராஜஸ்தானை அடைந்தனர்

கோட்டயம் மாவட்டம், கொருத்தோடு பஞ்சாயத்து பணக்காசிரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷீலாம்மா (வயது 50). இவரின் மகன் அருண் குமார் (29). இவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், மகனும் உள்ளனர்.

இந்நிலையில் அருண் குமாருக்கு திடீரென ஒவ்வாமையால் தசை வீக்கம் ஏற்பட்டு உடல்நிலை மோசமானது. இதையடுத்து ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்குமார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ஒரு மலையாளி மருத்துவர், அருண் குமார் நிலையைப் பார்த்து அவரின் தாய் ஷீலாம்மாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

தனது மகனின் நிலையை அறிந்த ஷீலாம்மா ஜோத்பூருக்குச் செல்ல முடிவு செய்தார். ஆனால், கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் எவ்வாறு செல்வது என நினைத்து வருந்தினார்.

அப்போது கோட்டயம் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஷீலாம்மாவுக்கு உதவி செய்ய முன்வந்தனர். அவருக்குக் கார் ஏற்பாடு செய்து கொடுத்து, இரு ஓட்டுநர்களையும் தங்கள் சொந்த செலவில் அனுப்பினர்.

மேலும், ஷீலாம்மா ஜோத்பூர் வரை இடையூறு இல்லாமல் செல்ல மத்திய அமைச்ச வி.முரளிதரன் உதவியையும் விஹெச்பி அமைப்பினர் கோரினார்கள். மத்திய அமைச்சர் அலுவலகம் சார்பில் முதல்வர் பினராயி விஜயனிடம் பேசப்பட்டது. மேலும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் தொடர்புகொண்டு முதல்வர் அலுவலகத்தில் பேசினார். இதையடுத்து, ஷீலாம்மாவுக்கு உரிய அனுமதிக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

மேலும், கோட்டயம் மாவட்ட ஆட்சியர் பி.கே. சுதீர் பாபா அனைத்து மாநில அரசுளுக்கும் கடிதம் அனுப்பி ஷீலாம்மாவின் பயணத்துக்கு உதவினார். கடந்த 14-ம் தேதி ஒரு காரில் ஷீலாம்மா, அவரின் மருமகள் பார்வதி, மற்றொரு உறவினர் என 3 பேரும் இரு ஓட்டுநர்களும் சென்றனர். ஏறக்குறைய 3 நாட்கள் சாலை மார்க்கமாக 6 மாநிலங்களைக் கடந்து இன்று காலை ஜோத்பூர் சென்றடைந்தனர்.

ஜோத்பூர் சென்று தனதுமகனைச் சந்தித்த பின் ஷீலாம்மா பிடிஐ நிருபருக்கு அளித்த பேட்டியில், “ நான் 2,400 கி.மீ. பயணித்தது வீண்போகவில்லை, கடவுள் என் மகனை என்னிடம் ஒப்படைத்துவிட்டார். என் மகனைப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மகன் உடல்நலம் தேறி வருகிறார்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x