Last Updated : 17 Apr, 2020 03:43 PM

 

Published : 17 Apr 2020 03:43 PM
Last Updated : 17 Apr 2020 03:43 PM

ராணுவத்தில் இதுவரை 8 பேருக்கு கரோனா பாதிப்பு; குணமடைந்தவர்கள் பணிக்குத் திரும்புகிறார்கள்: ராணுவத் தளபதி தகவல்

இந்திய ராணுவத்தில் இதுவரை மொத்தம் எட்டுப் பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும் ராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம். நாரவனே தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ள வேளையில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

கரோனா வைரஸுக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்தில் இந்திய ஆயுதப்படைகளும் களப்பணியில் முன்னணியில் உள்ளன.

சில நாட்களுக்கு முன்பு, கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு இந்திய ராணுவ மருத்துவர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளானார். அவரின் தொடர்பு வரலாறு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட முதல் ராணுவ வீரர் லடாக்கில் ஒரு ஜவான். டெல்லியில் இருந்து திரும்பிய கொல்கத்தாவில் உள்ள மற்றொரு மருத்துவரும் அடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டார்.

தற்போது கரோனா வைரஸ் இந்திய ராணுவத்தையும் பதம் பார்க்கத் தொடங்கியுள்ள நிலையில் அவர்களில் பலர் மீண்டு வருவதாக ராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஏஎன்ஐயிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

''நாங்கள் ஏற்கெனவே இரண்டு சிறப்பு ரயில்களில் ராணுவ சேவை வழங்கியுள்ளோம். பெங்களூரு முதல் ஜம்மு வரை, மற்றொன்று பெங்களூரு முதல் குவஹாத்தி வரை. இதுதவிர கரோனா வைரஸுக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்தில் களப்பணியில் அனைத்து மட்டத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

இதுவரை, இந்திய ராணுவத்தில் எட்டுப் பேரிடம் மட்டும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் இருவர் மருத்துவர்கள் மற்றும் ஒருவர் நர்சிங் உதவியாளர்.

இவர்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நால்வருக்கு நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர லடாக்கில் கரோனா பாதிப்புக்குள்ளான ஒரு ராணுவ வீரர் இப்போது முழுமையாக குணமடைந்து மீண்டும் பணியில் இணைந்துள்ளார்.

எந்தவொரு பாதிக்கப்பட்ட நபருடனும் தொடர்பு கொள்ளாத ராணுவப் பணியாளர்கள் மீண்டும் அலகுகளுக்கு மாற்றப்படுகிறார்கள். இந்திய ராணுவத்தினரைப் பொறுத்தவரை கரோனாவில் பாதிக்கப்பட்டடவர்கள் பெரும்பாலும் குணமடைந்து வருகிறார்கள்''.

இவ்வாறு எம்.எம்.நாரவனே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x