Last Updated : 17 Apr, 2020 01:18 PM

 

Published : 17 Apr 2020 01:18 PM
Last Updated : 17 Apr 2020 01:18 PM

தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு: அமலாக்கப் பிரிவு நடவடிக்கை

கோப்புப்படம்

புதுடெல்லி

டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி, ஜமாத் அறக்கட்டளையோடு தொடர்புடைய சிலர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனையின் அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

கரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர்.

இதையடுத்து அவர்களை போலீஸார், சுகாதாரத்துறையினர் அப்புறப்படுத்திய நிலையில் அங்கிருந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினர். இதில் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும், பலருக்கும் கரோனா வைரஸ் அறிகுறி இருந்ததும் தெரியவந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் பங்கேற்று இருந்தனர்.

ஆனால், மார்ச் முதல் வாரத்தில் இருந்து நடத்தப்பட்ட தப்லீக் ஜமாத் மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் 9 ஆயிரம் பேர் பங்கேற்று தங்கள் மாநிலங்களுக்குச் சென்றதாகத் தகவல் வெளியானது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அவரின் உத்தரவின் பேரில் கடந்த மாதம் 31-ம் தேதி நிஜாமுதீன் பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இருமுறை நேரில் ஆஜராக மவுலானா சாத் கந்தால்விக்கு போலீஸார் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதையும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி.

இந்தச் சூழலில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலா சாத் கந்தால்வி மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதை அடிப்படையாக வைத்து அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அமலாக்கப் பிரிவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், ''கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை மீறி தப்லீக் ஜமாத்தில் மாநாடு நடத்தியது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் கந்தால்வி உள்ளிட்ட 7 பேர் மீது நிஜாமுதீன் போலீஸார் கடந்த மாதம் 31-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

தப்லீக் ஜமாத் சார்பில் நடத்தப்பட்டு வந்த அறக்கட்டளையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த அறிக்கட்டளையின் வங்கிக் கணக்குகள், ஆவணங்களை நிதிபுலனாய்வுத் துறையினர் ஆய்வு செய்ததில் அதற்கு முகாந்திரம் இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக ஜமாத் அமைப்பின் தலைவர் கந்தால்விக்கு விரைவில் அமலாக்கப் பிரிவுத் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்படும். தற்போது அவர் சுயதனிமையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களிடமும் நாங்கள் ஆலோசிப்போம்.

இதுதவிர கந்தால்வியின் சொந்த வங்கிக் கணக்குகள், தப்லீக் ஜமாத்தோடு தொடர்புடைய சில நிர்வாகிகள் ஆகியோரின் வங்கிக்கணக்குகளையும் ஆய்வு செய்து வருகிறோம். இதில் பல நன்கொடைகளை வெளிநாடுகள், உள்நாட்டிலிருந்து அந்த இஸ்லாமிய அமைப்பு பெற்றுள்ளதாகத் தெரிகிறது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x