Last Updated : 17 Apr, 2020 12:53 PM

 

Published : 17 Apr 2020 12:53 PM
Last Updated : 17 Apr 2020 12:53 PM

லாக் டவுன் காலத்தில் கிராமங்களில் எவற்றையெல்லாம்  செய்ய அனுமதி?- மத்திய அரசு புதிய அறிவிப்பு

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள லாக் டவுன் காலத்தில் வரும் 20-ம் தேதிக்குப் பின் கிராமங்களில் எந்தெந்த செயல்களைச் செய்யலாம் என்பது குறித்து மத்திய உள்துறைஅமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். முதல் கட்ட லாக் டவுன் காலத்தில் வேளாண் செயல்பாடு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், சிறு தொழில்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தார்கள்.

கரோனா பாதிப்பு குறையாததையடுத்து, 2-வது கட்டாமக லாக் டவுனை அறிவித்த பிரதமர் மோடி, வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், வரும் 20-ம் தேதிக்குப் பின் கரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதாரச் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் வரும் 20-ம் தேதிக்குப் பின் கரோனா பாதிப்பு குறைந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டு எந்தெந்த தொழில்கள் இயங்கலாம் என துறை வாரியாக பட்டியல் தரப்பட்டன.

இதில் வேளாண் பணிகள், சரக்குப் போக்குவரத்து, சிறு தொழில்கள், சுயதொழில்கள், மீன்பிடித் தொழில், பயிர்த் தொழில் போன்றவற்றுக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், கண்டிப்பாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் 2-வது கட்டமாக கிராமங்களில் அனுமதிக்கப்பட்ட தொழில்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது.

உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுககும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பிய அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

  1. வரும் 20-ம் தேதிக்குப் பின் கிராமங்களில் சிறு காடுகளில் விவசாயம் செய்யவும், அறுவடைப் பணிகளைச் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.
  2. பட்டியலித்தனவர்கள், பழங்குடிகள் சார்பில் மலைப்பகுதிகளில் வளர்க்கப்படும் காடுகளில் வேளாண் பணிகளை வரும் மே 3-ம் தேதி வரை மேற்கொள்ளலாம்.
  3. கிராமங்களில் கட்டுமானப் பணிகள், தண்ணீர் மேலாண்மை, குழாய் பராமரிப்பு, குடிநீர் சப்ளை பணிகள், கழிவுநீர் குழாய் பராமரிப்பு, மின் கம்பங்கள் புதிதாக அமைக்கும் பணிகள், பழுது நீக்குதல், தொலைத்தொடர்பு கண்ணாடி இழை கேபிள் பதித்தல் அதுதொடர்பான பணிகளைச் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.
  4. வங்கி அல்லாத நிறுவனங்கள் குறிப்பாக சிறு நிதி நிறுவனங்கள், குறுநிதி நிறுவனங்கள் கிராமங்களில், குறைந்த அளவு பணியாளர்களுடன் செயல்படலாம். கூட்டுறவு சொசைட்டி அமைப்புகளும் லாக் டவுன் காலத்தில் குறைந்த பணியாளர்களுடன் செயல்படலாம்.
  5. மூங்கில், தென்னை, கோகோ, வாசனைப் பயிர்கள் சாகுபடி, அறுவடை, பராமரிப்பு, பேக்கிங், விற்பனை, சந்தைப்படுத்துதல் போன்றவற்றை லாக் டவுன் காலத்தில் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x