Last Updated : 16 Apr, 2020 06:44 PM

 

Published : 16 Apr 2020 06:44 PM
Last Updated : 16 Apr 2020 06:44 PM

இறந்த தலித் பெண்ணின் உடலைத் தூக்கிச்சென்று இறுதிச் சடங்கு: கடமைக்கு அப்பால் மனிதம் காத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்

உ.பியில் இறந்த பெண்ணின் உடலை தூக்கிச் சென்று இறுதிச்சடங்கு செய்த காவல் துறையினர் | படம்: ஐஏஎன்எஸ்

லக்னோ

நோயுற்று இறந்த தலித் பெண்ணின் உடலைத் தூக்கிச்சென்று இறுதிச் சடங்கு செய்த காவலர்களுக்கு கடமைக்கு அப்பால் மனிதம் காத்து நின்றதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய லாக் டவுன் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலும் வடமாநிலங்களில் காவலர்களே மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளைச் செய்து வருகின்றனர். காவல் உடுப்புகளுக்குள்ளே எளிய மனிதாம்சங்களும் இருப்பதை சமீபத்தில் அதிகமாகவே காண முடிகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சஹரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷன்பூர் கிராமப் பெண் மீனா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். கணவர் மறைவுக்குப் பிறகு தனியே வாழ்ந்து வந்த நிலையில் சமீபகாலமாக உடல் குன்றியிருந்தார். மீனா புதன்கிழமை உயிரிழந்ததை அடுத்து அவருக்கென்று இறுதிச்சடங்கு செய்யக்கூட ஆளில்லாத ஒரு மோசமான நிலை அங்கு நிலவியது.

இதனை அறிந்த அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த மூத்த சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ) தீபக் சவுத்ரி மற்றும் இரு கான்ஸ்டபிள்கள் கவுரவ் குமார் மற்றும் வினோத் குமார் ஆகியோர் இறந்த பெண்ண்ன் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்தினர்.

இச்சம்பவத்தை நேரில் கண்ட சிலர் இறுதிச் சடங்கு காட்சிகளை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துகொண்டனர்.

''ஆதரவற்ற ஒரு பெண்ணின் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்தியதில் காவல்துறையினரின் பங்களிப்பு மகத்தானது'' என்றும், ''கடுகடுக்கும் காவல் உடுப்புகளுக்குள்ளே மனிதாம்சம் காக்கும் எளிய மனிதர்களையே இதில் பார்க்க முடிந்தது'' என்றும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

லக்னோவில் நடந்த இன்னொரு சம்பவத்திலும், தனியே வசித்து வந்த மூதாட்டியின் உடலை எடுத்துச் சென்று தகனம் செய்த காவல் துறையினரையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x