Last Updated : 16 Apr, 2020 09:56 AM

 

Published : 16 Apr 2020 09:56 AM
Last Updated : 16 Apr 2020 09:56 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்தது; 24 மணிநேரத்தில் 37 பேர் பலி; 400பேரைத் தாண்டிய உயிரிழப்பு

இந்தியாவை மிரட்டி வரும் கரோனா வைரஸுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 37 பேர் பலியாகியுள்ளார்கள். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 414 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 941 அதிகரித்து 12 ஆயிரத்து 380ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,489 ஆக அதிகரித்துள்ளது. 10 ஆயிரத்து 477 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் மோசமான வகையில் பாதிப்பும்,உயிரிழப்பும் இருந்து வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 178 ஆக நேற்று இருந்த நிலையில், இன்று 187 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் நேற்று ஒரு நாளில் 3 பேர் உயிரிழந்ததால் 53 ஆக அதிகரித்துள்ளது. மூன்றாவதாக குஜராத்தில் நேற்று 5 பேர் பலியானதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று 2 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பஞ்சாப்பில் 13 பேரும், தமிழகம், ஆந்திராவில் தலா 14 பேரும் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் 12 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 11 பேரும், மேற்கு வங்கத்தில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்

ஜம்மு காஷ்மீரில் 4 பேரும், ராஜஸ்தான், ஹரியாணா, கேரளாவில் தலா 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்டில் 2 பேரும், பிஹார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 2,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரே நாளில் 300 பேருக்குமேல் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 295 பேர் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் 1,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 1,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 118 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 1,023 பேரும், தெலங்கானாவில் 647 பேரும், கேரளாவில் 388 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 987 பேரும், கர்நாடகாவில் 279 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 766 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 300, மேற்கு வங்கத்தில் 213, பஞ்சாப்பில் 186, ஹரியாணாவில் 205, பிஹாரில் 70, அசாமில் 33, உத்தரகண்ட்டில் 37, ஒடிசாவில் 60, சண்டிகரில் 21, சத்தீஸ்கரில் 33, லடாக்கில் 17 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 11 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 35 பேர், புதுச்சேரியில் 7 பேர், ஜார்க்கண்டில் 28 பேர், மணிப்பூரில் 2 பேரும், மேகலாயாவில் 7 பேரும், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x