Published : 14 Apr 2020 10:32 PM
Last Updated : 14 Apr 2020 10:32 PM

ஊரடங்கு; உங்களை அடைத்து வைக்க அல்ல: தொழிலாளர்களுக்கு உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

ஊரடங்கு என்பது உங்களை அடைத்து வைப்பது அல்ல, நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். இந்தநிலையில் மும்பை பாந்த்ராவில் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி வெளி மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு உத்தரவு இன்று முடிவடையும் நிலையில் தங்கள் ஊர்களுக்கு செல்லலாம் எனக் கருதி வெளி மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் திரண்டனர். ஊரடங்கு நீட்டிக்கப்படும் முன்பாக ரயில் இயக்கப்படும் என வதந்தியை நம்பி அவர்கள் கூடினர். ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ரயில்கள் இயக்கப்படாது எனவும் தகவல் வெளியானதால் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.

பின்னர் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை என்பதால் இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். சமூக விலகலை கடைபிடிக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சமாதானம் செய்யவும், அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசும், காவல்துறையும் உறுதியளித்துள்ளனர்.


இந்தநிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பந்த்ரா ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஏப்ரல் 14- ம் தேதிக்கு பின் ரயில்சேவைகள் இயங்கும் என நினைத்து வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்திருக்கலாம். வதந்தி பரப்புவர்கள், ஏழை தொழிலாளர்களுடன் உணர்வுகளுடன் விளையாடுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கிறேன்.

ஊரடங்கு என்பது உங்களை அடைத்து வைப்பது அல்ல. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். மத்திய அரசிடம் நான் பேசினேன். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உரிய பாதுகாப்பை அளிப்பது எங்களின் கடமை. இவ்வாறு உத்தவ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x