Published : 14 Apr 2020 05:50 PM
Last Updated : 14 Apr 2020 05:50 PM

ஊரடங்கு; 32 கோடி பேருக்கு வங்கிக்கணக்கில் பணம்- 5.29 கோடி பேருக்கு இலவச உணவு தானியம்: மத்திய அரசு தகவல்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 32 கோடி பேருக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 5.29 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் அனுப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவிகள் வழங்கி வருகின்றன.

இந்தநிலையில் மத்திய நிதித்துறை அதிகாரி ராஜேஷ் மல்ஹோத்ரா கூறியதாவது:

பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 32 கோடி பேருக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 29,352 கோடி ரூபாயாகும்.

5.29 கோடி பேருக்கு பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் இலவசமாக ரேஷன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 3985 மெட்ரிக் டன்கள் பருப்புகளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x