Last Updated : 14 Apr, 2020 03:31 PM

 

Published : 14 Apr 2020 03:31 PM
Last Updated : 14 Apr 2020 03:31 PM

அன்பான தேசத்துக்காக கண்ணீர் வடிக்கிறேன்; பணம், உணவு இருந்தும் ஏழைகளுக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி பேச்சுக்கு காங். சாடல்

புதுடெல்லி

பிரதமர் மோடியின் லாக் டவுன் குறித்த பேச்சில் வெறும் அறிவுரைகளும், ஜம்பமான வார்த்தை சொல்லாட்சிகளும் மட்டுமே இருந்தன, ஏழைகளின் துயர் துடைக்க நிதியுதவியும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கையும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

கரோனா வைரஸைத் தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஏற்கெனவே கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் இன்று வரை 21 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி மே 3-ம் தேதி வரை நீட்டித்து இன்று அறிவித்தார்.

பிரதமர் மோடியின் உரையில் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கத் தேவையான நிதித்தொகுப்பும், பொருளாதார வளர்ச்சிக்கான உறுதியான நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதுகுறித்து ஏதும் அறிவிக்கவில்லை.

பிரதமர் மோடியின் உரை குறித்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கரோனா வைரஸுடன் போரிடுவதற்கான செயல் திட்டம் பிரதமர் உரையில் எங்கே இருக்கிறது. மக்களின் பொறுப்புகளை உணரவைப்பது மட்டும் தலைமைப் பண்பு அல்ல. தேசத்தின் மக்களின் நம்பகத்தன்மையை நிறைவேற்றும் வகையிலும் அரசு செயல்பட வேண்டும். அதிகமான பேச்சுதான் இருந்தது. ஆனால், கரோனாவுக்கு எதிராகப் போராடும் செயல்திட்டம் எங்கே இருக்கிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறுகையில், “லாக் டவுன் நீட்டித்ததை ஆதரிக்கிறேன். பெறப்படும் லாபங்களையும் நிராகரிக்க முடியாது. வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு நிதித்தொகுப்பும் நிவாரணமும் பிரதமர் மோடி அறிவித்திருக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஜன்தன் கணக்கு, ஜிஎஸ்டி நிலுவை, ஆகியவற்றை அறிவித்திருத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறுகையில், “முதலில் 21 நாட்களும், அடுத்து 19 நாட்களும் ஏழைகள் உணவு உள்பட தங்களைத் தாங்களை காப்பாற்றிக்கொள்ளுமாறு கைவிடப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் பணம் இருக்கிறது, உணவு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு பணத்தையும் விடுவிக்காது, உணவையும் வழங்காது. என் அன்பான தேசத்துக்காக கண்ணீ்ர் வடிக்கிறேன்.

லாக் டவுனை வரவேற்கிறேன். அதை நீட்டித்ததற்கான காரணத்தையும் புரிந்து கொண்டேன். ஆனால் முதல்வர்கள் நிதி கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. கடந்த மார்ச் 25-ம் தேதிக்குப் பின் எந்தவிதமான நிதித்தொகுப்பும் இல்லை. ரகுராம்ராஜன் முதல் ஜீன் ட்ரீஸ் வரை, பிரபாத் பட்நாயக் முதல் அபிஜித் பானர்ஜி வரை அளித்த அறிவுரைகள் கேட்காத காதில் சொல்லப்பட்டவையா” என்று ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், “ எந்தவிதமான முக்கியமான அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடியின் பேச்சு அமைந்திருந்தது. பிரதமர் மோடியின் பேச்சு வியப்பாக இருந்தது. அறிவுரைகள், வார்த்தை ஜாலங்கள், உத்வேகம் இவை மட்டுமே இருந்தன. நிதித்தொகுப்பு இல்லை, எந்த விவரங்களும் இல்லை, உறுதியான செயல்பாடு இல்லை.

ஏழைகள், நடுத்தரக் குடும்பத்தினர், தொழில்துறை, வர்த்தகப்பிரிவு யாருக்கும் எந்தத் திட்டமும இல்லை. லாக் டவுன் நல்லதுதான். ஆனால், அதோடு மட்டும் முடிக்கமுடியாது. ஒவ்வொருவரின் வாழ்வாதாரமும் அடங்கியிருக்கிறது.

அனைவரும் தங்கள் கடமையைச் செய்து, லாக் டவுனை தீவிரமாகக் கடைப்பிடிக்க பிரதமர் கோருகிறார். மத்திய தர வகுப்பினருக்கும், பட்டிலியன வகுப்பு மக்களுக்கும், சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் உறுதியான நடவடிக்கை கேட்டு கடவுளிடம் பிரார்த்திப்பதா” எனக் கேட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x