Published : 12 Apr 2020 02:32 PM
Last Updated : 12 Apr 2020 02:32 PM

வெறுப்பைக் கக்காமல் பதிவிட முடியாதா? : மும்பையில் 24 மணிநேரத்தில் 12 வழக்குகள்: லாக்டவுன் நாட்களில் 32 பேர் கைது

சமூக ஊடக தளங்களில் வெறுப்புணர்வைப் பரப்புவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; சமீப நாட்களில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்; மேலும் வதந்தி, போலி செய்திகள் உள்ளிட்ட தவறான பதிவுகளுக்காக 108 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெறுப்பைக் கக்கி பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 21ந்தேதி தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்குப் பிறகு மார்ச் 24 அன்று 21 நாள் லாக்டவுனை பிரதமர் மோடி அறிவித்ததிலிருந்து மகாராஷ்டிரா சைபர்கிரைம் பிரிவு காவல்துறையினர் எந்தவொரு சிக்கலான பிரச்சினைகள் தொடர்பாகவும் சைபர்ஸ்பேஸை கண்காணித்து வருகின்றனர், குறிப்பாக தற்போதைய சூழலில் போலி செய்திகளும் கரோனா வைரஸைச் சுற்றியுள்ள வதந்திகளும் டஜன் கணக்கில் வரத் தொடங்கின.

புது டெல்லியில் நடந்த தப்லீஹி ஜமாத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே பரவலாக தொற்றுநோயைக் கண்டறிந்த சமீபத்திய பரிசோதனை முடிவுகள் குறித்த வெறுப்புணர்வு பேச்சுக்களும் பதிவுகளும் நாடெங்கும் காட்டுத்தீயென பரவின. ஒரு பக்கம் கரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் களப்பணியாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்துவரும் வேளையில் இன்னொரு பக்கம் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இனவாதக் குற்றச்சாட்டுக்களை பரப்புவதே சிலரின் வேலையாக இருந்தது.

லாக்டவுன் தொடங்கியதிலிருந்து மாநிலத்தில் சமூக ஊடகங்களில் போலி செய்திகள், வதந்திகள் பரப்புதல் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு போன்ற சம்பவங்களுக்கு எதிராக 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சைபர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மகாராஷ்டிரா காவல் கண்காணிப்பாளர் பால்சிங் ராஜ்புத் கூறியதாவது:

“கடந்த ஏழு நாட்களில் வெறுக்கத்தக்க பேச்சு வழக்குகளில் அதிகரித்து வரும் போக்கு உள்ளது, இது தொடர்பாக 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற முக்கிய வகை போலி செய்திகள் அல்லது வதந்திகள் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 24 வகையான தவறான தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

166 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆறு வழக்குகள் அறியப்படாத வழக்குகள். காவல்துறையினர் இதுவரை 32 பேரை கைது செய்து, கண்டுபிடிக்கப்பட்ட 108 பேரை அடையாளம் கண்டுள்ளனர்.

இத்தகைய தவறான போக்கு அதிகரிக்கும் வகையில் வாட்ஸ்அப்பில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் காணப்பட்டன, இதற்கு அடுத்த இடத்தில்தான் பேஸ்புக், டிக்டோக் மற்றும் ட்விட்டர் ஆகியவை உள்ளன.

சம்பந்தப்பட்ட அனைத்து தளங்களுக்கும் டேக்-டவுன் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, இதுவரை 32 பதிவுகள் அகற்றப்பட்டுள்ளன. வாட்ஸ்அப்பில் 85 பதிவுகள் உள்ளன, அவை தொழில்நுட்பத்தின் தன்மை மற்றும் அதன் குறியாக்கத்தின் காரணமாக அகற்றப்பட்டன. மற்ற ஊடகங்களில் 55 பதிவுகள் உள்ளன, நாங்கள் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அகற்றும் செயல்முறை நடந்து வருகிறது.

பிரபலமான சமூக ஊடகங்களில் ஒரு கருத்தை அல்லது தாங்கள் அறிந்துகொண்டதாக நம்பும் செய்திகளை பதிவிடுவதற்குமுன்பாக ஒன்றுக்கு பலமுறை சரிபார்த்துவிட்டு பதிவிட வேண்டும். ஏனெனில் இத்தகைய பிரபல சமூக ஊடக செய்தியிடல் பயன்பாட்டில் என்ன நடக்கிறது என்றால், ஒருமுறை ஒரு செய்தியை அது சரியோ தவறோ பதிவிட்டால் அதன்பிறகு அதை நிறுத்தமுடியாத அளவுக்கு அதன் ஓட்டம் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கானோரை சில நிமிடங்களுக்குள்ளாக பரவி விடுகிறது. அதிலும் சரிபார்க்கப்படாத, தவறான செய்திகள் ஊடகங்களில் பரவும்போது அதன் வேகம் கடுமையாக உள்ளது. அதன்பிறகு அதை தடுக்க இயல்வதில்லை.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் குறிப்பாக வாட்ஸ்அப்பில் கவனமாக பதிவிடுவதன் முக்கியத்துவத்தைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெறுப்பைக் கக்காமல் கருத்துக்களை, சரிபார்க்கப்பட்ட பிறகு வெளிவிடும் உண்மைத் தகவல்களை நேர்மையாக பதிவிட வேண்டும். வதந்தி, வெறுப்பைப் பரப்பும் வேலையில் ஈடுபடுபவர்களின்மீது கடுமையான சட்டம் பாயும் என்றும் அறிவிக்கபபட்டுள்ளது.

வதந்திகள் பரப்புவோர், வாட்ஸ்அப்பில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவோர் குறித்து காவல்துறை ஏற்கனவே மாநில மற்றும் நகர அளவில் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களைப் போலவே வாட்ஸ்அப் குழுக்களை நடத்தும் நிர்வாகிகளும் பொறுப்பேற்கப்படுவார்கள் என்று இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்கள் எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு மகாராஷ்டிரா காவல் கண்காணிப்பாளர் பால்சிங் ராஜ்புத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x