Published : 12 Apr 2020 08:20 AM
Last Updated : 12 Apr 2020 08:20 AM

பிஹாரில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் குழந்தை உடலுடன் பல மைல் நடந்த பெண்

பிஹாரில் பெண் ஒருவர் சாலையில் உதவியின்றி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் பரவியது.

மனதை உருக்கும் அந்த வீடியோவில் குழந்தையின் உடலை அந்த பெண் வைத்திருப்பதும், அருகில் அவரது கணவர் நிற்பதும் தெரிந்தது.

இதுகுறித்து குழந்தையின் தந்தை கிரேஜ்குமார் கூறும்போது, “எனது 3 வயது மகனுக்கு சில நாட்களுக்கு முன் சளி இருமலும் காய்ச்சலும் ஏற்பட்டது. முதலில் எங்கள் கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் காட்டினோம். ஆனால் அவன் உடல்நிலை மோசமானது. ஊரடங்கு காரணமாக ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மகனை டெம்போ ஒன்றில் ஆர்வால் மருத்துவனைக்கும் பிறகு ஜெகனாபாத் சடார் மருத்துமனைக்கும் கொண்டுசென்றோம். ஆனால் அங்குள்ள டாக்டர்கள், குழந்தையை பாட்னா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு கூறினர். ஆனால் ஆம்புலன்ஸ் வசதி செய்யவில்லை. டாக்டர்களின் அலட்சியத்தால் எங்கள் மகன் அங்கேயே இறந்துவிட்டான்” என்றார்.

குழந்தை இறந்த பிறகும் ஜெகனாபாத் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வழங்கப்படவில்லை. இதனால் குழந்தையின் உடலுடன் தம்பதியர் நடக்கத் தொடங்கினர். பிறகு உள்ளூர் மக்கள் உதவியுடன் சொந்த ஊர் வந்தடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பிஹார் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் சடார் மருத்துவமனை மேலாளர் ஒருவரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் பணியில் இருந்த மருத்துவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x