Last Updated : 11 Apr, 2020 01:37 PM

 

Published : 11 Apr 2020 01:37 PM
Last Updated : 11 Apr 2020 01:37 PM

கரோனா குறித்து பொய்ச் செய்திகள்: சமூக ஊடகக் குழுக்களின் அட்மின்களை குறிவைக்கும் மும்பை காவல்துறை

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் குழுக்களில் கரோனா பற்றிய பொய்யான தகவல்கள் பகிரப்பட்டால் அந்தந்தக் குழுக்களின் அட்மின்களே அதற்குப் பொறுப்பாவார்கள் என்று மும்பை காவல்துறை அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக், டிக் டாக், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில், எந்த பொய்யான, தவறான தகவல்களும் வரக்கூடாது என மும்பை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ஏப்ரல் 10 ஆம் தேதி ஆரம்பித்து 24-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்பை, அவதூறைப் பரப்பும் செய்திகளையும், பொதுமக்களிடையே பதற்றத்தைக் குழப்பத்தை ஏற்படுத்தும் செய்திகளையும், அரசாங்க அதிகாரிகள் மீதோ, கரோனா தடுப்புக்கான அவர்கள் நடவடிக்கை மீதோ அவநம்பிக்கை ஏற்படுத்தும் செய்திகளையும் தடை செய்துள்ளது. இந்த உத்தரவில் துணை ஆணையர் பிரணயா அசோக் கையெழுத்திட்டுள்ளார். இது போன்ற செய்திகள் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அல்லது பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் கருதப்படும்.

இந்தச் செயலைச் செய்யும் நபர்கள் எந்தக் குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்தக் குழுவின் நிர்வாகி (அட்மின்) இதற்கெல்லாம் தனிப்பட்ட முறையில் பொறுப்பானவர் ஆவார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை மும்பையில் போலிச் செய்திகள், புரளிகள், வெறுப்புப் பேச்சுகளைப் பரப்பியதாக 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் பால்சிங் ராஜ்புட் கூறியுள்ளார்.

ஊரடங்கு அமலான தினத்திலிருந்து, இதுவரை, இப்படியான சமூக ஊடகச் செய்திகளை வைத்து 161 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. இதில் 30 வழக்குகள் கடந்த 48 மணிநேரத்தில் பதிவு செய்யப்பட்டவை. வாட்ஸப், ஃபேஸ்புக், டிக் டாக் ஆகியவைதான் இப்படியான விஷயங்களுக்கு அதிகம் பயன்படுவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

கோவிட்-19, அதற்கான சிகிச்சை, வெறுப்பை உமிழும் பேச்சுகள் ஆகியவைதான் பரவலாக இருக்கிறது என்றும், இதுவரை 73 வழக்குகள் சமூக ஊடகத்தில் வெறுப்புப் பேச்சுக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x