

கர்நாடகாவில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ. ஆன ஏ.எஸ். ஜெயராம் தனது 51வது பிறந்த தின கொண்டாட்டங்களை விமரிசையாகக் கொண்டாடியது சர்ச்சையாகியுள்ளது.
கர்நாடகா தும்கூர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நூற்றுக்கணக்கான விருந்தாளிகளுடன் கேக் வெட்டி கொண்டாடியதாக போலீஸார் தெரிவித்தனர். ஜெயராம் தலைப்பாகையுடன் கிளவ் அணிந்து கொண்டு கேக்கை வெட்டும் காட்சி பிரபலமாகியுள்ளது.
தும்கூர் மாவட்டத்தில் உள்ள அங்காலக்குப்பி கிராமத்தில் இந்த பிறந்த நாள் விழா நடந்ததாக குப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தெரிவித்தார்.
ஜெயராம் பிறந்த நாள் ஹனுமன் ஜெயந்தியுடன் இணைந்ததால் ஆஞ்சனேய ஸ்வாமி கோயிலில் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.
ஆனால் லாக் டவுன் விதிமுறைகளை ஜெயராம் மீறவில்லை என்று கூறும் இன்ஸ்பெக்டர் ஜெயராம், எலுமிச்சை சாதம் பெற வந்த மக்களிடையே இருந்த அவசரத்தினால் சமூக விலக்கல் இல்லாமல் போனது என்று ஒப்புக் கொண்டார்.
சமூக விலக்கல் பிற மக்களுக்குத்தானா, லாக் டவுன் உத்தரவுகள் சாமானிய மக்களுக்கு மட்டும்தானா ஆளும் கட்சி நபர்களுக்கு பொருந்தாதா என்று கர்நாடகாவில் அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளனர்.