Last Updated : 10 Apr, 2020 03:42 PM

 

Published : 10 Apr 2020 03:42 PM
Last Updated : 10 Apr 2020 03:42 PM

உண்மையான தேசபக்தியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள்: ராகுல் காந்தி பாராட்டு

நாட்டின் உண்மையான தேசபக்தி மிகுந்தவர்கள், கரோனா வைரஸ் மக்களைத் தாக்காமல் பாதுகாக்கும் செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பேறுகால உதவியாளர்கள்தான் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இருப்பினும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லாக் டவுன் அறிவித்த நிலையிலும் கூட 199 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்தக் காலகட்டங்களில் சாலைகளையும், நமது சுற்றுப்புறங்களையும் சுகாதாரப் பணியாளர்கள்தான் சுத்தமாக வைத்து கிருமித் தொற்று இல்லாமல் காக்கின்றனர். மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளித்தல், தேவையான உதவிகளைச் செய்தல், கரோனா நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சை அளித்தல் போன்றவற்றை செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், பேறுகால உதவியாளர்கள் ஆகியோர் ஈடுபடுகிறார்கள்.

கரோனாவுக்கு எதிராக தேசம் நடத்தி வரும் போரில் போர் வீரர்களாக செவிலியர்களும், மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் இருந்து வருகிறார்கள். இவர்களைப் பாராட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்த ஆபத்தான சூழலில் அச்சமும், தவறான தகவலும் வைரஸைக் காட்டிலும் மிகப்பெரிய ஆபத்தானவை. ஆனால் சமூகப் பணியாளர்களான ஆஷா பணியாளர்கள அங்கன்வாடி ஊழியர்கள், ஏஎன்எம் ஊழியர்கள் அனைவரும் மக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த ஆபத்தையும், சுகாதாரமாக இருப்பதன் அவசியத்தையும் எடுத்துக்கூறி விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறார்கள். கரோனா நோயாளிகளுக்கு சேவை செய்து வருகிறார்கள்.

இவர்கள் மிகவும் துணிச்சலாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் மக்களுக்கும், சமூகத்துக்கும் பணியாற்றி கரோனா வைரஸுக்கு எதிரான போரில் முன்னணி வீரர்களாக இருக்கிறார்கள்.

இந்த இக்கட்டான, அவசியமான நேரத்தில் தேசத்துக்குச் சேவை செய்வதுதான் உண்மையான, போற்றக்கூடிய தேசபக்தி. நம்முடைய சமுதாயப் பணியாளர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள். வெளி உலகிற்கு அறியப்படாத ஹீரோக்கள், ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வராமல் உழைக்கிறார்கள். நமது குடும்பங்கள், உறவுகள்,நண்பர்கள் பெரிய சிக்கலில் சிக்காமல் இருக்க பாதுகாக்கிறார்கள்.

இந்த சமூகப் பணியாளர்களின் தியாகத்துக்கு நாம் அவர்களின் குடும்பத்துக்கு நாமும், தேசமும் மிகப்பெரிய நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். இந்த நெருக்கடி முடிந்ததும் அவர்களின் முன்மாதிரியான சேவை அவர்களின் பணிச்சூழலில் ஆழமானவேர் போன்ற மாற்றத்திற்கு ஒரு ஊக்கியாக செயல்படும் என்று நம்புகிறேன்,

இந்த தேசத்துக்கு சேவை செய்யும் ஒவ்வொரு சமூகப் பணியாளரையும் நான் வணங்குகிறேன். அவர்களின்குடும்பத்தினர் இந்த பெருந்தொற்றில் சிக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன்’’.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவி்த்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x