Published : 10 Apr 2020 07:47 AM
Last Updated : 10 Apr 2020 07:47 AM

திருமலையில் தனிமைப்படுத்தப்பட்ட 470 வேத பாடசாலை மாணவர்கள்

திருமலை

திருமலையில் உள்ள வேதபாட சாலையில் தங்கி படிக்கும் 470 மாணவர்களில், 5 பேருக்கு கரோனா தொற்று அறிகுறி இருந்தது. இதையடுத்து, மாணவர்கள் தனி விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் படிக்கும் வேதபாட சாலை மாணவர்கள் பலர் திருமலையிலேயே தங்கி விட்டனர். இவர்கள் அனைவரையும் அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால் சிலர் மட்டும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். தற்போது இந்த பாட சாலையில் 470 பேர் தங்கி உள் ளனர். இந்நிலையில், இந்த வேதபாட சாலையில் படிக்கும் மாணவர்களில் சிலர் மும்பையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளனர். இவர்கள் சில நாட்களுக்கு முன் திருமலைக்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால், நேற்று முன் தினம் திடீரென இவர்களில் 5 மாணவர்களுக்கு கரோனா அறிகுறி இருப்பதை அறிந்தனர். உடனடியாக இவர்கள் அனைவரும் திருப்பதியில் உள்ள சிம்ஸ் தேவஸ்தான மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், இவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது. இதனால் தேவஸ்தான அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். உடனடியாக தர்மகிரியில் உள்ள 470 மாணவர்களையும் திருமலையில் உள்ள நந்தகம் பக்தர்கள் தங்கும் விடுதியில் நேற்று மதியம் அழைத்து வந்து தனிமைப்படுத்தினர்.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ரவியிடம் கேட்டதற்கு, ‘‘வேதபாட சாலையில் படிக்கும் மாணவர்கள் ஏற்கெனவே அரசு நிபந்தனைகளின்படி தனித்தனியாக தங்கி படித்து வந்தனர். இவர்களின் சொந்த ஊர் வெகு தூரம் என்பதாலும், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதாலும் இவர்கள் திருமலையிலேயே தங்கி உள்ளனர். தற்போது 5 மாணவர்களுக்கும் கரோனா தொற்று இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தனித்தனியாக வேறொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்’’ என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x