Published : 09 Apr 2020 08:55 AM
Last Updated : 09 Apr 2020 08:55 AM

தனியார் ஆய்வகங்களிலும் கரோனா பரிசோதனை இலவசம்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

தனியார் ஆய்வகங்களிலும் கரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு சளி, ரத்த பரிசோதனை நடத்தப்பட்டு வைரஸ்தொற்றுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

முதலில் அரசு ஆய்வகங்களில் மட்டுமே கரோனா வைரஸ்பரிசோதனை நடத்தப்பட்டது. வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் 47 தனியார் ஆய்வகங்களும் பரிசோதனை நடத்த மத்தியஅரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்கு ரூ.4,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் ஆய்வகங்களில் கரோனா வைரஸுக்குஇலவசமாக பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சாஷங்க் டியோ சுதி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், ரவிந்தர பட்அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் கூறும்போது, “தனியார் ஆய்வக சோதனைக்கு ரூ.4,500கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் கட்டணம்வசூலிக்கக்கூடாது என்று கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளோம்.

இதுவரை 15,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இப்போதைய நிலையில்118 ஆய்வகங்களில் பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆய்வக எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர் சாஷங்க் டியோ சுதி கூறும்போது, “அரசு ஆய்வகங்களை போன்று தனியார் ஆய்வகங்களிலும் கரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

உலகம் முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. எனினும் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

தனியார் ஆய்வகங்களில் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு ரூ.4,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களால் இந்த கட்டணத்தை செலுத்த முடியாது. நமது நாடு இக்கட்டான காலத்தைகடந்து சென்று கொண்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகள், தனியார் ஆய்வகங்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை இலவசமாக நடத்தப்பட வேண்டும். என்ஏபிஎல், உலகசுகாதார அமைப்பு, ஐசிஎம்ஆர் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் மட்டுமே கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனு மீதுமத்திய அரசு பதில் அளிக்க 2 வாரங்கள்அவகாசம் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x