Published : 08 Apr 2020 10:07 PM
Last Updated : 08 Apr 2020 10:07 PM

ஊரடங்கால் மட்டுமே கரோனாவில் இருந்து நம்மை காக்க முடியும்: பிரதமர் மோடி

ஊரடங்கு நீட்டிப்பு பற்றி ஏற்கெனவே மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தியாவிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊரடங்களை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வழியாக இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த உரையாடலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நாடுமுழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என பிரதமர் மோடி அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்தாக தகவல் வெளியானது.

அனைத்துக் கட்சி தலைவர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மாநில முதல்வர்கள், அதிகாரிகள், பொது அமைப்பினர் என பலரும் வலியுறுத்தியுள்ளனர். அனைத்துக் கட்சிகள் மட்டுமின்றி பெரும்பாலான பொதுமக்களும் இதையே விரும்புகின்றனர்.ஊரடங்கு நடவடிக்கையால் மட்டுமே கரோனா பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு தந்துள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் எனது நன்றி. எனினும் இதுபற்றி மாநில முதல்வர்களுடன் பேசி இறுதி முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x