

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 21 நாட்கள் லாக்-டவுன் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரவித்தார்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவத் துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஏற்கெனவே ஆலோசனை நடத்தி, சூழல்களைக் கேட்டறிந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வழியாக இன்று ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எஸ்.சி.மிஸ்ரா, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சுதீப் , சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின் மக்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டில் லாக்-டவுன் காரணமாக வேளாண் துறையில் இருந்து வரும் சிக்கல்கள், விவசாயிகளின் பிரச்சினைகள், விளைபொருட்களைக் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள், உரம், பூச்சிமருந்து கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதை காங்கிரஸ் சார்பில் குறிப்பிட்டோம்.
இந்த 21 நாட்களில் விவசாயிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம். அவர்கள் ராபி பருவ அறுவடையை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதையும், அனைத்து உரங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள வரியை தற்காலிகமாக ரத்து செய்யவும் கோரினோம்.
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பதிவு செய்திருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, விவசாயப் பணிகளையும், அறுவடைப் பணிகளையும் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தோம். பிரதமர் மோடி பதில் அளித்தவகையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லாக்-டவுனை நீட்டிக்கவே வாய்ப்புள்ளது’’ எனத் தெரிவித்தார்.